Tuesday, September 11, 2018

“ இனிமேல் உன் பெயர் இரட்டைக்கனி எனப்படும் எபிராயீம்.”


“ இனிமேல் உன் பெயர் இரட்டைக்கனி எனப்படும் எபிராயீம்.”
“ அடேய் கருப்பா… உன் கதையை கேட்க கேட்க ஏதோ  ஒரு அழகிய கவிதையை கேட்பது போல் இருக்கிறது. எத்தனை தடவை கேட்டாலும் சலிப்பதே இல்லை. இருந்தாலும் நேரம் போக வேண்டுமல்லவா… சொல் உன் கதையை கொஞ்சம் விலாவாரியாகத்தான் சொல்லேன்.”
 “ஆடப்போங்கப்பா… நானும் என் கதையை எத்தனையோ தடவை சொல்லிவிட்டேன். சொல்லி சொல்லி எனக்கும் அலுத்துப்போய் விட்டது.”
“ அடப்பரவாயில்லை அப்பா.. பழைய நினைவுகள் ஒருபோதும் அலுப்பதுமில்லை. மறப்பதுமில்லை. இன்னும் சொல்லப்போனால் அவை நமக்கு நம் இளமையை மீட்டுத்தரும் அருமருந்தாக உதவுகின்றன. பசி வயிற்றைக்கிள்ளுமுன் அதை மறக்க உன் கதையை ஆரம்பி”
அவன் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு தன் கதையை ஆரம்பித்தான்.
   நான் ஒரு ராஜ குமாரன்.அபிசீனியா ( இன்றைய எத்தியோபியா ) என் தாய் நாடு. என் நாடு ஒரு பொன்னான நாடு. இயற்கை அன்னை எங்கள் நாட்டுக்கு எல்லா வளங்களையும் அள்ளி அள்ளி கொடுத்திருந்தாள். எங்கும் தங்கம் மின்னின. வைரமும் வைடூரியமும் எங்கும் கொட்டிக்கிடந்தன. மாணிக்கமும் மரகதமும் எங்கள் குழந்தைகளின் விளையாட்டுக்கற்கள் ஆயின.
எங்கள் நாடு சூரிய பகவானால் மிகவும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததினால் எங்கள் மேனியும் தக தக என்று மின்னும் கருநிறத்திற்கு மாறின. இதனாலேயே நாங்கள் எத்தியோப்பிய கருப்பு என்னும் பட்டப்பெயர் வைத்து அழைக்கப்பட்டோம். இந்த நிறமே எங்களுக்கு பாது காப்பானதாகவும் ஆனது.
  ஆப்ரிக்க தேசங்கள் முழுவதும் கருப்பு நிறத்தவர் நிறைந்திருந்தாலும் எங்கள் நாட்டவரைப்போல் மின்னும் கருநிற தேகம் உடையவர்கள் உலகிலேயே யாரும் இல்லை. சூரிய பகவானின் உக்கிரமம் எங்களை மட்டுமின்றி எங்கள் நாட்டில் வாழும் மிருகங்களையும் விட்டு வைக்கவில்லை. எங்கள் நாட்டு மிருகங்கள் மிக்க வலிமை வாய்ந்தவை ஆயின. பாம்புகளும் தேள்களும் கொடும் விஷம் கொண்டவை ஆயின.ஆனாலும் அவைகள் எங்கள் நாட்டுக்கே ஒரு தனி அடையாளம் ஆயின. எங்கள் நாட்டில் விளையும் சாம்பிராணி மரங்களும் அதன் பிசின்களும் மிகுந்த வாசனை மிக்கவை.
 எங்கள் நாட்டு இளவரசிதான் ஷேபா நாட்டின் அரசியாகவும் இருந்தாள். எங்கள் நாட்டு சட்டப்படி அரசி திருமணம் செய்துகொண்டால் அவள் அரச பதவியை இழந்து விடுவாள். அவள் கணவன் அரசனாக வேண்டும். இப்படி இருக்கையில்  ஜெருசலேமில் மாபெரும் மன்னர் சாலமோனின் ஞானத்தைப்பற்றி எங்கள் நாட்டின் வெளி உறவு அமைச்சர் மூலம் அறிய வந்த எங்கள் ஷேபா நாட்டு அரசி அவருடைய ஞானத்தை பரிசோதிக்க விரும்பி ஜெருசலேம் சென்றார். அங்கே விதி விளையாடியது. என்னதான் மாமன்னர் சாலமோனுக்கு நூற்றுக்கணக்கான கட்டிய மனைவியர் இருந்தும் அவருக்கு இன்னும் குழந்தை பாக்கியம் இல்லாமலிருந்தது. இந்த சமயத்தில் எங்கள் ஷேபா நாட்டு அரசி அங்கே சென்றதும் மாமன்னர்  சாலமோன் அவளையும் திருமணம் செய்துகொண்டார்.
   அவருடைய வயிற்றில் முத்தாக விளைந்தான் இஸ்ராயேல் தேசத்தின் முதல் இளவரசன். மாமன்னர் சாலமோனின் யூத குலத்தின் ஒரே நேரடி வாரிசு ஒரு வெளி நாட்டுக்காரியின் வயிற்றில் உதித்தது பற்றி அவருடைய பட்டத்து ராணிகளுக்கு பெரும் வயிற்றேரிச்சலை கிளப்பியது. இது ஒரு சதியில் முடியலாம் என்று பயந்த எங்கள் ஷேபா நாட்டின் ராணி யூதேய சிங்கம் மாமன்னர் சாலமோனின் வாரிசை தன் வயிற்றில் தாங்கியபடி தன் நாடு திரும்பினாள். அவள் கணவர் மாமன்னர் சாலமோன் எங்கள் நாட்டு சட்டப்படி அரசராகவே மாமன்னர் சாலமோனின் மனைவி அவர் பெயராலே ஆட்சி செய்தார். அவள் வயிற்றில் பிறந்து வளர்ந்த யூத குல வாரிசு இந்த பூமியில் பிறந்தான். அவனுக்கு இப்னா ஹக்கீம் என பெயரிடப்பட்டது. தக்க வயது வந்ததும் அவனை  மாமன்னர் சாலமோன் தன் நாட்டுக்கு வரவழைத்து அவனுக்கு இளவரசு பட்டம் சூட்டினார். ஆனால் இளவரசர் இப்னா ஹக்கீம் தான் தாய் நாடு திரும்பும்போது தன் தந்தையார் ஜெருசலேமில் கட்டியிருந்த புகழ்வாய்ந்த தேவாலயத்திலிருந்த உடன்படிக்கை பெட்டகத்தை திருடிச்சென்றான். இதை அறிய வந்த மாமன்னர் சாலமோன் மிகுந்த விசனமுற்றார். இருப்பினும் தன் மகன் மீதுள்ள பாசத்தால் அங்கிருக்கும் இஸ்ரேலிய தேவனுக்கு பலி ஆராதணை செலுத்த நூற்றுக்கணக்கான  ஆலய குருக்களை எத்தியோப்பாவுக்கு அனுப்பினார். அவர்கள் எத்தியோப்பியர்களுடன் கலந்தனர். அவர்தம் வாரிசுகளுக்கு கருப்பு யூதர் என பெயரிடப்பட்டது.”
 “ அதெல்லாம் சரிதான்… உன் கதையை சொல்லப்பா கருப்பா” என்றான் ஒருவன்.
  “ இப்படிப்பட்ட அரச குலத்திலிருந்து வந்தவன் தான் நான். எனக்கென அழகிய மனைவியும் மக்களும் இருந்தனர். கருப்பு யூத குலத்திலிருந்த வந்திருந்த எனக்கு ஆண்டவன் கொடுத்திருந்த பத்து கட்டளைகளை அனுசரிக்க மிகுந்த விருப்பம் இருந்ததால் எனக்கு பிறன் மனைவியை விரும்பும் எண்ணதிற்கே இடமில்லாமல் போயிற்று. நான் எனக்கிருந்த அறிவினாலும் ஆற்றலினாலும் பெரும் வியாபாரி ஆனேன்.  என் நாட்டில் கிடைக்கும் தங்கம் வைரம் வைடூரியம் மரகதம் மற்றும் பெரும் யானைத்தந்தம், வாசனை திரவியங்கள் அரிய வகை மூலிகைகள் சாம்பிராணிகள் இவற்றை ஏற்றுமதி செய்தும், எங்கள் நாட்டில் கிடைக்காத முத்து பவளம் பட்டு துணிமணி வகைகள், தங்க வெள்ளி நகைகள் ஆகியவற்றை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்தும் பெரும் பணம் சம்பாரித்தேன். என் சொந்தங்கள், பந்தங்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்புகள் வழங்கியும் நல்ல ஊதியம் கொடுத்தும் பலவாறாக அவர்களை முன்னேற்றினேன்.
 ஆனால் என் வளர்ச்சி பிடிக்காத சிலர் என்னை கவிழ்க சதி செய்தனர்.   அடிமேல் அடியாய் அடித்தால் அம்மியும் நகரும் என்பது போல் நான் மெல்ல மெல்ல மதுவுக்கு அடிமை ஆனேன்.  பிறகு மெல்ல மெல்ல பெண்களை நாடினேன். என்னிடமிருந்த பணத்தாலும் அதிகாரத்தாலும் கன்னியரை அடிமைப்படுத்தினேன். மெல்ல மெல்ல நான் ஒரு காம வெறிபிடித்த மனிதனானேன். என் எதிரிகள் தங்கள் எண்ணத்தில் ஜெயித்தார்கள். நான் அடியோடு தோற்றுப்போனேன். என் செல்வத்தை மட்டுமல்லாது என் மனைவி மக்கள் சொந்தங்கள் பந்தங்கள் அனைத்தையும் இழந்தேன். இப்போது எல்லோராலும் ஒதுக்கப்பட்டு இப்போது உங்கள் முன் நிற்கிறேன். என்றான் அந்த கருப்பன். பிறகு மாலை மாலையாய் கண்ணீர் சிந்தி பெரிதாய் அழத்துவங்கினான். அந்த இடத்திலிருந்த அனைவரும் சற்றே அமைதியாய் இருந்தனர்.
பிறகு அந்த கருப்பன்,” அடேய் வெள்ளையா நான் என் கதையை கூறிவிட்டேன்..  நீ உன் கதையை கூறு என்றான். வெள்ளையன் தன் கதையை சொல்ல ஆரம்பித்தான்.
  “ நண்பர்களே … என் கதையும் உன் கதை போன்றதுதான். ஆனால் சற்றே மாறுபட்டது. நான் உன்போல் அரச குலத்திலிருந்து வரவில்லை. ஆனாலும் ஒரு இளவரசனுக்கு இருக்க வேண்டிய அனைத்து குணங்களும் எனக்கு இருந்தது. எனக்கு எல்லாவிதமான போர்ப்பயிற்சியும் இருந்தது. என் வாள் வீச்சு எதிரியை நிலை குலைய வைக்கும். என் கடற்பயணங்களால் எனக்கு  கடலும் கடல் சார்ந்தவைகளும் நிலமும் அது சார்த்தவையும் பருவங்களும் அதன் சுழற்சிகளும் எனக்கு கற்றுத்தந்த பாடங்கள் மிக அதிகம். நான் ஒரு கடல் வாணிகன். எனக்கு இந்த மத்திய தரைக்கடல் ஓரங்களிலுள்ள அனைத்து நாடுகளும் அத்துபடி.  நான் பிறந்தது பொனீஷியாவில்.( இன்றைய லெபனான் ) இந்த பொனீஷியர்கள் கடல் வாணிபத்தில் கில்லாடிகள். இவர்களிடம் பல விதமான தொழில்கள் இருந்தாலும் மிகுந்த வருமானம் தரும் தொழில் சாயப்பட்டறைகள் தான். இவர்கள் கடல் வாழ் உயிரினங்கள் சில வெளிப்படுத்தும் சாயத்தால் சில வர்ண சேர்மங்களை சேர்த்து விதவிதமான வண்ணக்கலவைகளை துணிகளில் தோய்த்து அவைகளை தூர தூர தேசங்களில் விற்று மிகுந்த லாபம் பார்த்தனர். இந்த வண்ணக்கலவை ரகசியங்களை தகப்பன் மகனுக்கு கூட சொல்லிக்கொடுக்க விரும்பியது இல்லை.அவ்வளவு ரகசியமாக தங்கள் தொழில் ரகசியங்களை பாதுகாத்து வந்ததினால் இந்த பொனீஷிய நாடு பொருளாதாரத்தில் மிகவும் வளர்ந்துகொண்டே இருந்தது. நானும் இந்த வண்னக்கலவை ரகசியத்தை தெரிந்துகொள்ள எவ்வளவோ முயற்சி செய்து பார்த்துவிட்டேன். ஆனால் முடியவில்லை. பிறகு அந்த முயற்சியை கைவிட்டு இத்தகைய வண்ணத்துணிகளை பல நாடுகளூக்கு கொண்டு சென்று அவற்றை விற்று பெரும்பொருள் சம்பாரித்தேன். காலமும் காற்றும் ஒரே மாதிரி  செல்வதில்லை. எனக்கும் விதி சதி செய்தது. அது என் மைத்துனன் உருவில் வந்தது. பொதுவாக யூதர்கள் யாரையும் அவ்வளவு சீக்கிரம் நம்பி விடுவதில்லை. ஆனால் என் மைத்துனனே என்னை மோசம் செய்வான் என்பதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.  என்னை மோசடி செய்ய அவன் பல முயற்சிகளை மேற்கொண்டான். கொஞ்ச நாளில் நான் மதுவுக்கு அடிமை ஆனேன். பிறகு எல்லா பணக்காரர்களூக்கும் ஏற்படும் பெண்கள் ஆசைக்கு நானும் அடிமை ஆனேன். கொஞ்ச காலத்தில் என் நிலைமை தலை கீழாய் மாறிப்போனது. எனக்கு வியாபாரத்தில் நாட்டம் இல்லாமல் போனதால் பெரும் நஸ்ட்டம் ஏற்பட  எனக்கு கூட்டாளிகளாய் இருந்தவர்களால் என் கடன் சுமை காரணமாக நான் என் கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்டேன். என் மனைவி மக்கள் கதி என்னவாயிற்று என்று எனக்குத்தெரியவில்லை. இது நடந்து இப்போது பத்து ஆண்டுகள் ஆயிற்று. இப்போது உங்கள் முன் நிற்கிறேன் ” என்றான் அந்த வெள்ளையன்
“ நீயாவது பரவாயில்லையப்பா… என் கதை இன்னும் மோசம் எனக்கும் இப்படி ஒரு நிலைமை வரும் என்று கனவிலும்கூட நான் நினைத்தது இல்லை. நான் ஒரு பெரும் கப்பல் வியாபாரி. வெனிஸ் என் பூர்வீகம். நாடு நாடாக நான் சென்று கப்பல் வியாபாரம் செய்ததினால் எனக்கு பெரும் செல்வம் உண்டாயிற்று. அதனால் ஏற்பட்ட மோசமான சகவாசத்தால் எனக்கு உடலில் வெண் புள்ளிகள் உண்டாயிற்று. நாளடைவில் அது மிகப்பெரிதாக என் உடல் முழுவதும் பரவி என் அடையாளத்தையே மாற்றிவிட்டது. இந்த பொனீஷியவில் நான் கால் வைத்தவுடன் இந்த கப்பல் துறைமுக அதிகாரி என்னை சிறையிலிட்டு என்னை பரிசோதித்து எனக்கு குஸ்ட்ட வியாதி இருப்பதாகவும் அதனால் என்னை நாடு கடத்துவதாகவும் கூறி என் கப்பலை பறிமுதல் செய்து அதை அதன் விலைமதிப்பில்லா  சரக்குகளுடன் நடுக்கடலில் எரித்துவிட்டான். நான் ஒரே நாளில் பிச்சைக்காரன் ஆனேன். என் வியாதி தெரிந்த அனேகர் என்னை கைவிட்டனர். துரத்தோ துரத்து என துரத்தினர். பல நாடுகளாய் நான் அலைந்து திரிந்து இப்போது உங்களுடன் இருகின்றேன்” என்றான் அவன்..
  இவர்கள் ஏதோ ஒரு உலக மஹா வட்ட மேஜை மா நாட்டில் தங்களின் சாகசங்களையும் வெற்றிகளையும் பெரும் விளக்கங்களுடன் சொல்லினர் என்று நேயர்கள் நினைத்துக்கொண்டீர்களா ?. அதுதான் இல்லை. அவர்கள் அனைவரும் ஒரு பத்து பேர் கொண்ட குழுவாய் வாழ்ந்த பெரும் குஸ்ட ரோகிகள். சரி நீ உன் கதையை சொல்… நீ உன் கதையை சொல் “ என்று அவர்கள் ஒருவருக்கொருவர் தங்களின் வீரப்பிரதாபங்களையும் தாங்கள் வீழ்ந்த கதை பற்றியும் தங்களுக்கு எப்படி இந்த பாழும் குஸ்ட வியாதி எப்படி வந்தது என்பது பற்றியும் தங்களுக்குள்ளே ஆறுதல் சொல்லிக் கொண்டும் நேரத்தை போக்கிக்கொண்டும், நமக்கும் ஒரு வாழ்வுகிடைத்தால் அதை எப்படி நல்ல முறையில் நிர்வாகிக்க வேண்டும் என்று ஆண்டிகள் மடம் கட்டிய கதையாய் அப்படியே தூங்கிப்போயினர்.  குஸ்ட நோயின் கொடுமையும் மக்களின் வெறுப்பும் அவமானமும் ஒருவாய் சோற்றுக்கும் நாயாய் பேயாய் அலைந்து திரிந்தவர்களுக்கு ஒரு திறந்த வெளி குகைதான் அவர்களுக்கு மெய்யாகவே சொர்க்கம் போல அடைக்கலம் கொடுத்தது.
     அவர்களுக்கு இருந்த பசிதாகம் அவர்களை தூங்க விடவில்லை. மீண்டும் எழுந்து அமர்ந்தார்கள். ஒருவன்,” நமக்கும் ஒரு வாழ்வு கிடைத்தால்… அதாவது தெய்வாதீனமாக கடவுளே நேரில் வந்து நமக்கு விமோட்ச்சனம் கொடுத்தால்…. நம் குஸ்ட நோயினின்று நம்மை விடுவித்தால்.. அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள் “ என்றான் உள்ளூர்கார குஸ்ட ரோகி. அடேய் மடையா…குஸ்டம் என்றால் உனக்கு என்ன தெரியுமா…அது ஆண்டவனின் சாபத்தால் வரும் நோய். இந்த நோய் கண்டவன் உருவிழந்து புண்களால் நிறைந்து மிகுந்த வலி வாதை பட்டு சாக வேண்டும்.இந்த வியாதிக்கு மருந்தில்லை. மரணம் மட்டுமே முடிவு” என்றான் வெள்ளையன்.” நண்பர்களை இதை நான் அறிவேன். ஆனாலும் நான் சொன்னபடி நடந்தால் அதாவது அப்படி ஒரு நன்மை நமக்கு ஏற்பட்டு விட்டால் நீங்கள் எல்லாம் என்ன செய்வீர்கள்?”
    அடப்போய்யா… அப்படி எல்லாம் ஒன்றும் நடந்து விடாது உன் வாக்கு மட்டும் பலித்துவிட்டால்… நான் மட்டும் மீண்டும் பழையபடி என் உடல் நலம் பெற்றுவிட்டால் ஆஹா … அதை நினைக்கும்போதே என் உடம்பு புல்லரிகின்றது…என்னை இந்த நிலைக்கு ஆளாக்கின அந்த பாவியை… அந்த துரோகியை கொண்று பழிக்குப்பழி தீர்த்துவிட்டுதான் நான் மறு வேலை பார்ப்பேன்” என்றனர் அந்த ஒன்பது குஸ்ட ரோகிகளும் ஒரே குரலாக..
“ இல்லை நண்பர்களே… நாம் நம் எதிரிகளை மன்னிப்போம்… நமக்கு வந்த துன்பம் நம் எதிரிக்குகூட வரக்கூடாது என்று நினைப்போம். நாம் யாரும் ஆண்டவனுக்கு எதிராக எந்த குற்றமோ.. பழிபாவமோ செய்யவில்லை.எனவே இந்த குஸ்ட்டம் ஆண்டவரின் சாபத்தா;ல் வரவில்லை …மாறாக நாம் நம்மனம் பொருந்தி செய்த பழிபாவத்தாலேயே வந்தது என்று ஏற்றுக்கொள்வோம்” என்றான் அந்த பத்தாவது நபரான உள்ளூர்கார குஷ்ட்ட ரோகி. அவன் பிறந்து வளர்ந்த ஊர் சமாரியா.
 “ நாம் அளவுக்கு மீறி நல்லவர்களாக இருந்ததுதான் நாம் செய்த குற்றம்.. என் நண்பர்களுக்கும் சொந்த பந்தங்களுக்கும் நான் எவ்வளவோ செய்திருந்தும் அனைவரும் நம்மை கை விட்டனர்.ஏமாற்றினர். அரசியலும் வியாபாரமும் சுபாவத்தில் ஒன்றுதான். இரண்டுக்கும் பொதுவான நோக்கம் ஒன்றே.ஒன்றுதான். அது நாம் வளர வேண்டும் எதிரி சாக வேண்டும். என்பதே. இதைமட்டும் நான் அன்றே உணர்ந்திருந்தால் நமக்கு இந்த துன்பம் வந்தே இருந்திருக்காது என்றான் கருப்பன். சரி. நடந்து முடிந்த கதையை பற்றியோ  நிறைவேறாத ஆசைகளை பேசியோ பயன் இல்லை. நமக்கு மட்டும் நல்லது நடக்க வேண்டுமென விதி இருக்குமானால்…… சபிக்கப்பட்டவர்களாகிய நம்மால் மனிதரை நோக்கிபோக முடியாது. ஆண்டவனை நோக்கியே போக வேண்டும். பகவானுக்கு மட்டும் மனம் இருந்தால் அவரே நம்மை தேடிவருவார் என்றான் வெள்ளையன் விரக்தியாக. அவன் வாக்கு பலித்தது. அடுத்த நாள் இயேசுநாதர் அவர்கள் இருக்கும் குகைக்கு அருகில் வந்தார்.
   இயேசுநாதர் தங்கள் ஊர் வழியாக வருகின்றார் என்று அறிந்ததும் அந்த பட்டிணத்து வாசிகள் பெரும் கூட்டமாக சாலையில் கூடிவிட்டனர். இயேசுநாதர் தன் சீடர்களுடன் இங்கே வந்ததும் அந்த சமாரிய மக்கள்,” இயேசுவே… தாவீதின் குமாரனே எங்கள் மேல் இரக்கம் வையும். எங்களை ஆசீர்வதியும்… எங்களோடு பேசும்” என்றனர். ஆனால் இயேசுநாதர்..” இல்லை…நான் உங்களோடு பேச முடியாது. அதற்கு எனக்கு நேரம் இல்லை” என்றார். அப்போது ஒரு சிறுவன்  தன் தோட்டத்திலிருந்த சில மாதுளம் பழங்களை பறித்துவந்து இயேசுவிடம் கொடுத்து,” ஆண்டவரே எனக்கு உம்மிடம் கொடுக்க வேறு ஒன்றும் இல்லை. நாங்கள் பிறப்பால் தாழ்ந்தவர்கள். தாங்கள் உயர்ந்த ஜாதியை சேர்ந்தவர். ஆயினும் நான் உம்மை நேசிக்கிறேன். என் காணிக்கையை தயவாய் ஏற்றருளும் சுவாமி” என்றான்.
    அவனது அன்பில் தன்னை மறந்த இயேசுநாதர்,” மகனே…கடவுளுடைய படைப்பில் ஏற்றத்தாழ்வுகள் ஏதுமில்லை. எல்லாம் சாத்தானின் தூண்டுதலால் மனிதர்களே தங்களை தாங்களே பிரித்துக்கொண்டார்கள். கடவுள் தான் இந்த உலகை படைக்கும்போது எல்லாம் நல்லதெனவே கண்டார். சாத்தானின் சதியால் ஆதாம் பாவம் செய்தபிறகு எல்லாம் தலைகீழாய் மாறிப்போனது. நாடுகள் பிரிந்தன. அவற்றில் உள்ள மக்களும் பிரிந்தனர்.. இனத்தால் குணத்தால், நிறத்தால், பணத்தால் என்று எங்கும் பிரிவினையும் தவறான போதனையும் பரவியதால் உண்மை என்னவென்று மக்கள் கண்டறிய முடியாதபடி பேதம் முழுவீச்சில் பரவியது. ஆனாலும் ஒரு காலம் வரும். அப்போது எல்லா மக்களும் ஆண்டவனின் குழந்தைகள் என்னும் உண்மை கண்டறியப்படும். இதற்கு தேவையானது தன்னைப் படைத்த தேவனைப்பற்றிய அறிவும் அவர்மீது அன்பும் நம்பிக்கையும் விசுவாசமும் மட்டுமே. இதோ இந்த மாதுளை கனிகளைப்பார். இந்தக்கனியை எப்படி சாப்பிடுவது என்று தெரியாமல் அப்படியே கடித்து சாப்பிடுபவன் முட்டாள். அவன் இதை கடித்து சாப்பிட்டுவிட்டு இந்தக்கனி கசக்கிறது. இதைப்படைத்த கடவுளுக்கு அறிவே இல்லை என்பவனை கேடு சூழட்டும். ஆனால் துரதிர்ஸ்ட்ட வசமாக இப்படித்தான் பலர் கடவுளைப்பற்றிய  தெளிவான சிந்தனை இல்லாமலும் அவருடைய  ஞானத்தையும் ஆற்றலையும் உணராமலும் இருகின்றனர். இந்தக்கனியின் மேல் தோல் அதன் உள்ளே இருக்கும் மாணிக்க கற்கள் போன்ற விதைகளுக்கு எவ்வளவு பாதுகாப்பாக இருக்கின்றன. அந்த சிவந்த நிறமும் ருசியும் என்னவாய் மனிதர்களை கவர்கின்றன.  இவற்றிலுள்ள கனிகளை பிரிக்கும் மெல்லிய சுவர் போன்ற ஒரு சவ்வு சிறிதே கசப்பானது ஆனாலும் அதுவும் ஒரு மருந்துதான். இந்த சிறிய மெல்லிய சவ்வை ஒரு சிறுமிகூட எளிதாக பிரித்துவிடமுடியும். இப்படித்தான் ஒரு காலத்தில் சகோதரர்களாக இருந்த யூதர்களும் சமாரியர்களும் பிற்காலத்தில் பெரும் ஏற்றத்தாழ்வுக்கு ஆளாயினர். ஒருவரை ஒருவர் மதிப்பதே இல்லை. ஆக பிரிவினையை களையுங்கள். அண்ணன் தம்பிகளாக சேர்ந்து வாழுங்கள் இந்த மாதுளை கனிகளைப்போல “ என்றார். இதற்குள்ளாக  இயேசுநாதர் தாங்கள் வாழும் அந்த ஒதுக்கப்பட்ட குகை அருகே வந்துவிட்டார் என்று அறிந்ததும் அந்த பத்து குஸ்ட ரோகிகளும்  தங்கள் குகையைவிட்டு வெளியே வந்து,” ஆண்டவரே , இயேசுவே..எங்கள் மேல் இரக்கமாயிரும் என்று கத்திக்கதறினர். இவர்களின் கூக்குரல் இயேசுவை அடைந்தது. அவர் அவர்களை நோக்கி ,” உங்களுக்கு என்ன வேண்டும் என்றார். ஆண்டவரே  எங்களுக்கு இந்த குஷ்டவியாதி குணமாக வேண்டும்” என்றனர். அதற்கு இயேசு,” நீங்கள் போய் உங்கள் தேவாலய குருக்களிடம் காண்பித்து சுத்திகரம் செய்துகொள்ளுங்கள்” என்று கூறி ஆசீர்வதிதார்.
   அந்த பத்து குஸ்ட்ட ரோகிகளும் தாங்கள் தேவாலயத்துக்கு செல்லும் வழியிலேயே  தாங்கள் குணப்படுத்தப்பட்டதை அறிந்து மிகுந்த சந்தோஷப்பட்டு தங்கள் வழியே சென்றனர். ஆனால் ஒருவன் மட்டுமே ஆண்டவறாகிய இயேசுவிடம் திரும்பி வந்தான். அவன் வேறு யாரும் அல்ல. அந்த உள்ளூர்கார சமாரியன் தான். அவன் ஆண்டவரின் முன்னிலையில் வந்து அவர் பாதங்களில் முகம் குப்புற விழுந்து,” ஆண்டவரே என் தேவனே உமக்கு என் தாழ்ந்த நமஸ்காரம். எனக்கு மறு வாழ்வுகொடுத்து என்னை மீண்டும் ஒரு மனிதனாக மாற்றி நல்ல உருகொடுத்த உமக்கு அனந்தகோடி நமஸ்காரமும் ஸ்த்தோத்திரமும் உண்டாகுக. உம்முடைய திரு நாமம் இந்த உலகத்திலும் பரலோகத்திலும் போற்றப்படுவதாக. உம்மை அனுப்பியவராகிய பிதாவானவர் போற்றி ஸ்துதிக்கப்படுவாராக.உம்முடைய இஸ்பிரீத்து சாந்துவின் திரு நாமமும் ஸ்துதிக்கப்படுவாராக. உம்மை பெற்றடுத்த உம் திருமாதாவின் திருநாமம் வாழ்தப்படுவதாக..என்று மிகவும் சப்த்தமாக வாழ்த்தினான்
    ஆனால் அங்கிருந்த மக்களும் அப்போஸ்த்தலர்களும் கூட ஒரு குஸ்ட்ட ரோகி ஆண்டவரின் திருமுன் சப்த்தமாக பேசுவதை ஆட்சேபித்தார்கள். ஆனால் அந்த சமாரியன் மேலும் உரத்தகுரலில்,” என் ஆண்டவர் எனக்கு செய்திருக்கின்ற மகத்தான காரியங்களைப்பற்றி நான் ஏன் பேசக்கூடது? அவரை நான் ஏன் வாழ்த்தக்கூடாது. என்னை ஏன் தடை செய்கின்றீர்கள்” என்றான்.
 “ நீ குணமடைந்துவிட்டாய் அல்லவா… அவரை உன் இதயத்தில் வைத்து அவரை வாழ்த்தி கணம் பண்ணு. அது போதும் “ என்றனர். ஆனால் அவனோ,” மாட்டேன் முடியாது. என்னால் அவரை மகிமைப்படுத்தாமல் இருக்கவே முடியாது. என்னுள் இருக்கும் இஸ்பிரீத்துவானவர் என்னில் இருந்து பேசுகின்றார்.என்னை இரட்ச்சித்து தேற்றுகிறவாகிய ஆண்டவரின் ஸ்த்துதிகளை நான் பாடுகிறேன். என்னைத்தடுக்க நீங்கள் யார்? என் உள்ளம் மகிழ்ந்து களி கூறுகின்றது.  நீங்களும் அவரை வாழ்த்தி ஸ்த்துதியுங்கள் “ என்றான் ஆண்டவரால் குணம் பெற்ற அந்த சமாரியன்.
   அப்போது இயேசுநாதர்,” போதும்… மனிதரே ..உம் விசுவாசம் உம்மை குணப்படுத்தியது. உம்மை இரட்சித்திருகின்றது. நீ பெற்றுக்கொண்ட இந்த ஞான ஒளியில் தொடர்ந்து முன்னேறு.  நீ உன் வழியே போகலாம் “ என்றார். அந்த சமாரியன் அவருக்கு நன்றி சொல்லி சிறிது தூரம் சென்றான். பிறகு மீண்டும் அவரிடம் திரும்பிவந்து,” ஆண்டவரே தேவரீரிடம் ஒரு விண்ணப்பம்” என்றான். “ என்னிடம் உனக்கு கொடுக்க ஒன்றுமில்லை.  இன்னும் சொல்லப்போனல்.. இப்போது எங்களிடம் உனக்கு கொடுக்க ஒரு ரொட்டித்துண்டு கூட இல்லை.” என்றார்.
 அந்த சமாரியன் அவர் திருமுன் மீண்டும் விழ்ந்து ” ஆண்டவரே தேவரீர் எனக்கு புது வாழ்வு கொடுத்திருகின்றீர். என்னுடைய குஸ்ட்டத்தின் நிமித்தம் என மூளை எல்லாம் அரித்துப்போய்விட்டது. இப்போது எனக்கு புது வலிமை புது யவ்வனம்.. புதிய ஞானம் என எல்லாம் புதிதாக இருக்க நான் காண்கின்றேன். என் பெயரே எனக்கு மறந்து போய்விட்டது. எனக்கு ஒரு புதிய பெயரை தாருங்கள் என்றான் அவன்.
 இயேசுநாதர் அவனிடம்,” மனிதா…. இந்த ஊரின் பெயர் என்ன?” என்றார். அவன் ,” ஆண்டவரே இந்த ஊரின் பெயர் எப்பிராயீம்” என்றான். இயேசுநாதர்,” மனிதா… இனிமேல் உன் பெயர் எப்பிராயீம் எனப்படுக. எப்பீராயீம் என்பதற்கு இரட்டைக்கனி என்பது பொருள். இப்போது உன் பெயருக்கான அர்த்தம் புறிந்ததா…உனக்கு கடவுள் இரட்டை ஆயுளை கொடுத்திருகின்றார். மீண்டும் ஒரு புது வாழ்வை கொடுத்திருகின்றார். உன்னில் இப்போது பழையது என ஒன்றுமே இல்லை. நீ புதிதாக பிறந்த பிறவி போல உருவெடுத்திருகின்றாய் அல்லவா..ஆகவே உனக்கு இந்த எப்பீராயீம் என்னும் பெயர் சரியான பொருத்தம் தான்…. சரி… நான் பத்து பேரை குனப்படுத்தவில்லையா..நீ மட்டும் தானே திரும்பிவந்து எனக்கு நன்றி கூறினாய்… மெய்யான தேவனை மகிமைப்படுத்தினாய்.. மற்ற ஒன்பது பேரும் எங்கே?” என்றார்.
         ஆண்டவரே அவர்கள்  தாங்கள் குணமடைந்ததும் மிகுந்த சந்தோசத்தினால் உங்களை மறந்து தத்தம் வழியே போய்விட்டார்கள். அவர்கள் எனக்குத்தெரிந்து தங்களுடைய பழைய வாழ்க்கையை தேடி போய்விட்டதாக நினைகின்றேன்” என்றான் அந்த சமாரியன். அப்போது இயேசுநாதர் சில வார்த்தைகளை முனுமுனுத்தார். அது,” இந்த மக்கள் தங்கள் நாவால் என்னை ஆண்டவரே  என் தேவனே என்மேல் இரக்கமாயிரும் என்று அழைகின்றார்கள். ஆனால் அவர்கள் இதயமோ என்னைவிட்டு வெகு தூரத்தில் இருக்கின்றது” என்றார். மீளவும் அவர் இந்த மீதி ஒன்பது பேரின்மீதும் நான் பரிதாபப்படுகின்றேன். தாங்கள் இழந்ததை மீண்டும் கைப்பற்ற அவர்கள் எடுக்கும் முயற்சி தேவையான ஒன்றுதான். ஆனால் அதை அடையும் வழியில் ஒரு நீதி நேர்மை இருக்க வேண்டும். ஆனால் பொதுவாக இவர்களுடைய முயற்சி பழி பாவத்தில் தான் முடியும்.”  இந்த நேரத்தில் இயேசுநாதர் சற்றே தன் கண்களை மூடி தியானித்தபின்,” அவர்களுடைய பிந்திய நிலைமை முந்தைய நிலைமையைவிட மோசமானதாக இருக்க காண்கிறேன் “ என்றார்.
  பிறகு ,” கடவுளிடம் அழுது அழுது பெற்றுக்கொண்ட ஆசீர்வாதங்களையும்  வரங்களையும் நேர்மையான முறையில் பயன்படுத்தவில்லை என்றால் அந்த வரமே அவர்களுக்கு எதிராகத்திரும்பி அவர்களுக்கே அது சாபமாக முடியும் . ஆண்டவரின் அருள் என்பது நல்லோர் மீதும் தீயோர் மீதும் பொழியப்படும் மழையை போன்றது. அவரவர் அதை பயன்படுத்தும் விதத்தில்தான் அது வரமாகவோ அல்லது சாபமாகவோ அமையும். ஆயினும் நான் அவர்கள் ஒன்பது பேரின்மீதும் இன்னும் இரக்கம் உள்ளவராகவே இருகின்றேன்” என்றார். மேலும் ,” நான் அவர்களிடம் நன்றியை எதிர்பார்க்கவில்லை.  ஆயினும் நன்றி நவிலல் ஒரு சிறந்த குணம். அது மனிதரால் மிகவும் விரும்பப்படுவது. மேலும் நன்றி நவிலல்பல நன்மைகளை பெற்றுத்தரும் என்பதை அவர்கள் ஏன் உணரவில்லை.?. நனறி மனிதனுக்கு மனிதனை மட்டுமல்லாது கடவுளையும் மனிதனையும் கூட இணைக்கிறது.” என்றார்.
  அந்த சமாரியன் ஆண்டவரின் திருப்பாதத்தில் வீழ்ந்து,”ஆண்டவரே… மீண்டும் ஒரு விண்ணப்பம்” என்றான். ஆண்டவர் ,”  எப்பிராயீம்…நீ நம்மிடம் வேண்டுவதென்ன?” என்றார்.
 “ ஆண்டவரே… என் தேவனே.. எனக்கு இந்த உலக வாழ்க்கை என்னவென்று புறிந்துவிட்டது. ஒருவன் கையில் காசும் பணமும் அதிகாரமும் சேர்ந்து கொண்டால் அவன் மீண்டும் ஒரு நல்ல மனிதனாக இருக்க முடியாது, அவன் சாத்தானுக்கு அடிமை ஆவதைத்தவிர அவனுக்கு வேறு வழி இல்லை. சாத்தானின் ஆயுதம் மூன்று. அவை மது மங்கை பணம். இந்த உலகில் உள்ள அனைத்து வகையான பிரச்சனைகளுக்கும் போர்களுக்கும் சண்டை சச்சரவுகளுக்கும் இந்த மூன்றும் தான் காரணம். ஒன்று அவை தனித்தோ இரண்டாகவோ அல்லது மூன்றும் சேர்ந்தோ வரும் பட்ச்சத்தில் அதிலிருந்தே அனைத்து வகையான பாவங்களும் உற்பத்தி ஆகின்றன. இந்த உலகில் எந்த நாட்டிலும் இந்த மூன்று காரணிகள் இல்லாத அரசாங்கமும் கிடையாது, வியாபாரமும் கிடையாது. பணத்தை விரும்பாத மனிதனோ, பெண்னை விரும்பாத மனிதனோ, மதுவை விரும்பாத மனிதனோ இந்த உலகில் யாருமே இல்லை. வேண்டுமானால் இவற்றில் ஏதாவது ஒன்றை விரும்பாதவனாக இருப்பான். இது நான் கற்றுக்கொண்ட பாடம். மேலும் எனக்கு மனைவியோ அல்லது குழந்தை குட்டிகளோ எதுவும் கிடையாது. செல்வத்தின் மீதும் எனக்கு பற்று இல்லை. இந்த அடிமையை தேவரீர் ஏற்றுக்கொள்வீர்களா ?’ என்றான் அந்த சமாரியன்..இவனது கூற்றின் உண்மையை அறிந்துகொண்ட இயேசுநாதர், “எபிராயீம்….. எம்மை பின் செல்வதால் உனக்கு துன்பமே ஏற்படும். ஆனாலும் உனக்கு நான் ஒரு உறுதி அளிக்கிறேன். என் பரலோக இராஜ்ஜியத்தில் உனக்கும் ஒரு இடம் தர என்னால் முடியும். என்னை பின் செல். இராயப்பா.. இந்த மனிதரையும் நம்மோடு சேர்த்துக்கொள்” என்றார்.
   புதிதாகவந்து சேர்ந்துகொண்ட இந்த சமாரியனுக்கும் பரலோகத்தில் இடம் ஒதுக்கியதால் இயேசுநாதர் அவன் மீது எவ்வளவு அன்பும் இரக்கமும் கொண்டிருக்க வேண்டும் என்று உணர்ந்த இராயப்பர்,” இதோபார்  எபிராயீம் நான்தான் முதலாமவன். இயேசுநாதரின் முழு அன்பும் பாசமும் எனக்குத்தான் முதலில் இருக்க வேண்டும். தெரிந்ததா. இதோபார் பரலோகத்தின் திறவுகோல் என்னிடம்தான் இருகின்றது எச்சரிக்கை” என்றார். அதற்கு அந்த சமாரியன்,” என் எஜமானே ..தேவரீர் பெரிய மனதுவைத்து அந்த பரலோக வாசலின் உள்ளே என் ஒருகாலை மட்டும் வைக்க அனுமதி கொடுங்கள். எனக்கு அவ்வளவு இடம் போதும். சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க மாட்டான் என்பது சரிதான் போலும் ” என்றான்.
   இவர்களின் சம்பாஷனையை கேட்ட இயேசுநாதர்,” இராயப்பா…அன்று ஒருநாள் இரவு அஞ்சாராக்குகையில் நாம் அனைவரும் என் தாயாருடன் தங்கி இருந்தபோது நான் சொன்னதை மறந்துவிட்டாயா? உன்னை என் திருச்சபையின் தலைவராகத்தான் நான் நியமித்திருந்தேன். ஆனால் என் நேசத்தாயாரை என் திருச்சபைக்கு பாதுகாவலியாக நியமிக்கிறேன் என்று நான் கூறியதை மறந்துவிட்டாயா”? ஒரு தாய்க்கு திருச்சபையில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் அன்பு சமமாக இருக்க வேண்டும் அல்லவா. இதில் எபீராயீம் மீது உனக்கென்ன இவ்வளவு காய்ச்சல் “ என்றார்.   
     அவ்வளவுதான் இராயப்பர். “ ஆண்டவரே… தேவரீர்  என்னை முழுவதுமாக அறிவீர்.” என்றார். பிறகு அந்த சமாரிய ஊழியன் எப்பிராயீம் இடுப்பில் கைவைத்து நட்புடன் “ வாரும் என் தோழரே.. ஆண்டவரின் இராஜ்ஜியத்தில் நீரும் ஒரு பிரஜையாய் இரும்.” என்றார்.
   இந்த அஞ்சாரா குகையை பற்றிய ஒரு சிறு குறிப்பு. இது ஜோர்டான் நாட்டில் அஜ்ஜலோன் என்னும் மலைப்பகுதியில் அமைந்திருக்கும் ஒரு குன்றுதான் அஞ்சாரா குன்று. இந்த குன்றின் உச்சியில் உள்ள ஒரு குகைதான் அஞ்சாராக்குகை எனப்படுகின்றது. இந்த குகைதான் தற்போது ஒரு தேவாலயமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மலையின் அடிவாரத்தில் உள்ள ஒரு சிறிய குன்றின் மீதுள்ள ஊரில்தான் தான் மா பெரும் தீர்க்கதரிசி எலியாஸ் பிறந்ததாக வரலாறு கூறுகின்றது.
  எலியாஸ்
தீர்க்கதரிசியின் நினைவாக இந்த இடத்தில் கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருந்த தேவாலயம் இப்போது சிதிலமடைந்த நிலையில் உள்ளது. ஆனாலும் அங்கிருக்கும் ஞானஸ்நான தொட்டியும் அங்கே பதியவைக்கப்பட்டுள்ள அழகான மொசைக்கற்களும் இன்றளவும் காணக்கூடியவனாக உள்ளன. அவற்றில் புனித எலியாஸ் தீர்க்கதரிசியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.
மேலும் மாமன்னர் தாவீது தன் மகன் அப்சலொமின் கலகத்தால்  ஜெருசலேமிலிருந்து தப்பி ஓடிவந்து இந்த மலையில் உள்ள  குகையில்தான் தஞ்சம் அடைந்தார் என்றும் ஒரு தகவல் உள்ளது. இந்த மலையின் மீதுள்ள அஞ்சாரா குகையில்தான் இயேசுநாதரும் அவரது தாயரும் அவர் தம் சீடர்களும் ஒருமுறை தங்கியிருந்ததாகவும் அங்கிருந்த இடத்தில்தான் தான் தன் நேசத்தாயாரை திருச்சபையின் பாதுகாவலியாக நியமித்ததாகவும் ஒரு தகவல் உண்டு. உண்மையில் இந்த அஜ்ஜலோன் மலைத்தொடரில் பல குகைகள் உள்ளன. இவற்றுள் பலவற்றில் இயேசுநாதர் அவ்வப்போது தங்கி இருந்தாலும் தன் நேசத்தாயரை தன் திருச்சபையின்  பாதுகாவலியாக நியமித்தது எந்த குகையில் என்று நிச்சயமாக சொல்ல முடியவில்லை. ஆனாலும் இந்த அஞ்சாரா குகையின் வரலாற்று சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் அது இந்த குகையாகத்தான் இருக்கும் என்று நம்பத்தோன்றுகிறது. இது உண்மை என்பதுபோல் நடந்த ஒரு சம்பவம் வரலாற்று முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
  கடந்த 2010 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் தேதி  இங்குள்ள மாதா சுரூபத்தையும் அவரது பீடத்தையும் இங்குள்ள கன்னியரும் அவருடன் பணிபுரிந்த மூன்று உள்ளூர் வாசிகளும் சுத்தம் செய்யும்போது மாதாவின் முகம் உயிர் பெற்றதாகவும் அவரது கண் இமைகள் திறந்து மூடியதாகவும் சற்று நேரத்தில் அவரது கண்களிலிருந்து மனித இரத்தம் வடிந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் சாட்ச்சியம் கூறுகின்றனர்.  இந்த நிகழ்வைப்பற்றி பல உறுதியான மருத்துவ அறிக்கைகளும் தேவாலய பிதாப்பிதாக்களின் அறிக்கைகளும்  இந்த சம்பவம் உண்மை என்றே சாட்ச்சியம் கூறுகின்றன.
         இந்த தேவாலயமானது ஜெருசலேமின் பிதாப்பிதாக்களால் நிர்வாகிக்கப்படுகின்றது.  இந்த நிகழ்வை ரோமன் கத்தோலிக்க திருச்சபையும் உறுதிசெய்து ஒரு சிறந்த திரு யாத்திரை ஸ்தலமாக அங்கீகரித்திருகின்றது. இந்த அஞ்சாரா மலையிலுள்ள இந்த மாதா ஆலயம் மலைமேல் மாதா என்றழைக்கப்படுகின்றது. இந்த திருயாத்திரை ஸ்தலம் ஜோர்டான் தலை நகர் அம்மானி;லிருந்து  வடக்கே ஒன்றரை மணி நேரம் பயணித்தால் அடைந்துவிடலாம்..
மேலும்  அந்த பத்து குஸ்ட ரோகிகளின் வசித்துவந்த அந்த குகை இன்று தூய ஜார்ஜ் ஆலயம் என்று அழைக்கப்படுகின்றது இந்த தேவாலயம் கிரேக்க பழமை ரீதி திருச்சபையின் ஆதிக்கத்தில் இருகின்றது. இந்த குகை தேவாலயம் சமாரியாவில் எப்பீராயீம் என்னும் பட்டிணத்தில் புர்கீ என்னும் சிற்றூரில் அமைந்திருக்கின்றது. தற்போது இந்த குகை தேவாலயம் சிறந்த திரு யாத்திரை ஸ்தலமாக மாறிவிட்டது. இஸ்ராயேல் தலை நகர் ஜெருசலேமிலிருந்து சமாரியா நோக்கி வடக்காக சுமார் ஒன்றரை மணி நேரம் காரில் பயணித்தால் இந்த புர்கி என்னும் ஊர் வரும்
.