Saturday, June 21, 2014

" சைத்னயா என்னும் அதிசய சகாயமாதா "




" சைத்னயா என்னும் அதிசய சகாயமாதா "

       சைத்னயா என்னும் ஒரு ஊர் இன்றைய சிரியா என்னும் நாட்டில் தமஸ்க்கு நகரின் வடக்கில் சுமார் 18 மைல் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும். வேத காலத்திற்கும் முற்பட்ட வரலாறு இந்த நகருக்கு உண்டு. சிரியா நாட்டிலுள்ள இந்த சைத்னயா நகரைப்பற்றி அந்த நாட்டிலிருக்கும் அனைவருக்கும் தெரியும். சிரியா பழமைவாத
திருச்சபையின் ஆதிக்கத்தில் [ syrian orthodox church] இங்கிருக்கும் ஒரு மாதாகோயில் மிகவும் பழமை வாய்ந்தது. பல அதிசயங்கள் இந்த மாதாவின் பெயரால்  நடைபெற்றிருந்தாலும் சிலவருடங்களுக்கு முன்னால் நடைபெற்ற ஒரு சம்பவத்தால் இந்த நகரிலுள்ள மாதா கோயில் உலகப்புகழ்பெற்றது. 
   இந்த சம்பவம் பற்றி நான் அறியவந்த  உடனேயே நானும் இதைப்பற்றி நம் உலகத்தமிழ் நேயர்களுடன் பகிர்ந்துகொள்ளவிரும்பியே இந்த மாதாவைப்பற்றி அறிய வந்தேன். நான் சொல்லப்போகும் இந்த சம்பவம் சிலருக்கு  நம்பமுடியாமல் இருக்கலாம். ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும் என்கின்றது இந்த சம்பவத்தைப்பற்றிய செய்திகள். ஊடகங்களின் ஆதிக்கம் மிகுந்துள்ள இக்காலங்களில் எதையும்  மறைக்கவும் முடியாது. மறுக்கவும் முடியாது. ஆனாலும் தேவ தாயாரின் மகத்துவமும் அவரின் திருமகன் யேசு கிரிஸ்த்து நிகழ்த்திய அற்புதமும் இச்சம்பவத்தால் பெரிதும் சிலாகித்து பேசப்படுவதால் அதைப்பற்றி உலக கிறிஸ்த்துவ மக்கள் அறிந்துகொள்ளவேண்டியதும் அவசியமாகிறது. இனி இந்த சம்பவத்தை படித்தப்பிறகு அதை நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பத்தை பொருத்தது.
  அந்த நவீன சொகுசுக்காரான லிமோசின் அதிவேகத்தில் பறந்தது. டமாஸ்கஸ் விமான நிலயத்திலிருந்து வாடகைக்கு பிடிக்கப்பட்டிருந்த காரில் கணவன் மனைவி ஓட்டுனரைத்தவிர  வேறு யாரும் இல்லை. " டிரைவர்... நல்ல பாட்டாகப்போடு " என்றான் கணவன். டிரைவரும் நல்ல பாடல் ஒன்றைப்போட்டார். ஆனால் அந்த கணவானின் துணைவியாருக்கு ஏனோ அது பிடிக்காமல் போயிற்று. 
    " வேண்டாம் அந்த பாடலை நிறுத்துங்கள் " என்றாள் அவள். உடனே கணவனுக்கும் மனைவிக்கு பூசல் எழுந்தது.
    " ஏன் பாட்டை நிறுத்தனாய்?" என்றான் அவன்.
   " ஆமாம்..நான் இப்போதிருக்கும் மனநிலையில் அந்தப்பாட்டு ஒன்றுதான் குறைச்சலாக்கும் " என்றாள் அவள். இப்படியாக ஆரம்பித்த அந்த வாய் வார்த்தை பிறகு வாய்ச்சண்டையாக மாறியதால் நிலைமையை மாற்ற எண்ணினார் டிரைவர். " ஐய்யா..தங்களுக்குள் ஏதோ பிரச்சனை போல் தெரிகிறது..உங்கள் குடும்ப விவகாரங்களில் நான் தலை இடுவதற்கு  மன்னிக்கவும். ஆனால் உங்கள் பிரச்சனை என் வேலையில் நான் கவனமாக செயல்பட முடியாமல் செய்கின்றது. என்னுடைய சேவையில் ஏதேனும் குறை இருந்தால் சொல்லுங்கள். நான் திருத்திக்கொள்கிறேன்" என்றான் அவன். 
    ஆனால் நிலைமையை உணர்ந்த அவள் கணவன்," ஐய்யா..நாங்கள் உம்முடைய சேவையில் குறை ஒன்றும் காண வில்லை. இது எங்கள் குடும்ப விவஹாரம். உம்மிடம் சொல்வதில் ஒன்றும் குறைந்துவிடாது. இருப்பினும் சொல்கிறேன்" என்று அவன் பிரச்சனையை ஒருவாறு கூற ஆரம்பித்தான்.
" ஐய்யா சவுதி அரேபியாவை சேர்ந்த எனக்கும் என் மனைவிக்கும் திருமணமாகி பல வருடங்கள் ஆகிவிட்டன.ஆனால் இதுவரை எங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. நாங்கள்  பார்க்காத வைத்தியம் இல்லை. எங்களுக்கு மருத்துவம் பார்த்த வைத்தியர்கள் எங்களிடம் குறை ஏதும் இல்லை எனவும் கூறிவிட்டார்கள். இந்த பிரச்சனையால் என் குடும்பத்தில்  பெரும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. எனது தாயார் என் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வேறு ஒரு நல்ல பெண்ணாக பார்த்து திருமணம் செய்துகொள்ள கூறுகின்றார். ஆனால்  எனக்கு என் மனைவியை விவாகரத்து செய்ய மனம் இல்லை. அப்படி ஒரு நல்ல குணம் அவளுக்கு.. இது என் தாயாருக்கும் தெரியும். சரி... அவளை விவாகரத்து செய்ய வேண்டாம். அவள் நம்முடனே இருக்கட்டும். அவளை ஒதுக்கி வைத்துவிட்டு வேறு ஒரு திருமணம் செய்துகொள் என்கின்றார் என் தாயார். எனக்கு அதிலும் இஸ்ட்டம் இல்லை. சரி... வீட்டிலேயே இருப்பதைவிட வேறு எங்காவது சென்று சுற்றிப்பார்த்துவிட்டு வந்தால் மனதுக்கு கொஞ்சம் ஆறுதலாகவும் ஒரு மாற்றமாகவும் இருக்குமே என்றுதான் இந்த சிரியா நாட்டுக்கு சுற்றுலா வந்துள்ளோம். வந்த இடத்தில் அவள் தன் அதிருப்த்தியை என்மீது காட்டுகின்றாள். அவ்வளவுதான்" என்றான் அவள் கணவன்.
   " அடடடே..விஷயம் அவ்வளவுதானா... பரவாயில்லை..நல்ல வேளையாக என்னிடம் கூறினீர்கள்...ஐயா..நானும் ஒரு முஸ்லீம்தான். ஆனால் இங்கிருக்கும்... அதோ தொலைவில்  தெரிகிறதே ஒரு மலை.. அதன் மேல் தெரிகிறதல்லவா ஒரு மாதா கோயில்... அதுதான் சைத்னயா மாதாகோயில். இங்கிருக்கும் மாதாக்கோயில் மிகவும் சக்தியுடையது.
பல அற்புதங்களும் அரும் செயல்களும் இங்கு வேத காலத்திலிருந்தே நடை பெற்று வந்திருகின்றன. இங்கிருக்கும் முஸ்லீம்களும் கூட இந்த சக்த்தி உடைய அன்னையை வணங்கி போற்றுகின்றார்கள். அவருடைய ஒரே மகன்தான் யேசுநாதர் என்னும் நபி. இந்த மலைக்கு செல்ல பல படிக்கட்டுகளை தாண்டி செல்லவேண்டும். அங்குள்ள கன்னிமாடத்தில் நல்ல  உபசரிப்பு இருக்கும். இவ்வளவு தூரம் படி ஏறிவந்திருக்கும் பக்தர்கள் யாவருக்கும் களைப்பு தீர பானமும் உண்ண உனவும் தந்து உபசரிகின்றனர். பிறகு அங்குள்ள தேவதாயாரின் படம் முன்பாக ஒரு மெழுகுதிரியை ஏற்றி வைத்து தங்களுக்கு வேண்டியதை நேர்ச்சி செய்கின்றார்கள். இங்கு வந்து வேண்டிச்செல்லும் யாவருக்கும் கேட்டது கிடைக்கும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உள்ளதால் இங்கு முஸ்லீம், கிறிஸ்த்துவர்,கிறிஸ்த்துவர் அல்லாதவர் என்ற பேதம் இங்கே இல்லை. அனைவரும் இந்த தாயாரின் பிள்ளைகளே என்பது
இங்குள்ளோர்களின் அசைக்க குடியாத நம்பிக்கை. எனவே நான் சொல்கிறேன் என்று நீங்கள் தப்பாக நினைக்காமல் நீங்களும் அங்கே சென்று ஒரு வேண்டுதல் வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு அந்த சக்தி உள்ள மாதா அவசியம் ஒரு குழந்தையை தருவாள் என்ற நம்பிக்கையோடு போய்வாருங்கள். நீங்கள் வரும்வரை நான் இங்கேயே இருப்பேன்...
போய்வாருங்கள்" என்றார் அந்த டிரைவர்.
   அந்த டிரைவரின் வார்த்தையில் ஏதோ ஒரு உண்மை இருப்பதாக உணர்ந்துகொண்ட அந்த முஸ்லீம் தம்பதிகள் மனமுவந்து அந்த மாதாக்கோயிலின் படிகளில் ஏறிச்சென்றனர். மேலே ஆலயத்துக்கு வந்ததும் அங்குள்ள மாதாசபை கன்னிகைகள் அவர்களை உபசரித்து பானமும் உண்ண ரொட்டியும் கொடுத்து உபசரித்தனர். பிறகு அங்குள்ள மாதாவின்  திருப்படத்தின்முன்பாக மனமுருகி பிரார்த்தித்தனர். அந்த படமானது யேசுவின்சீடரான புனித லூக்கா தன் கைப்படவே வரைந்த படமாகும் என்று கூறுகின்றனர்.
     இந்த படத்திற்கு வெள்ளிக்காப்பு செய்து மூடப்பட்டுள்ளது. மாதாவின் முகமும் அவரது திருமகனாகிய குழந்தை யேசுவின் முகம் மட்டுமே தெரியும் 
[சுவிசேஷகரான புனித லூக்கா தன் கைப்படவே வரைந்த மாதாவும் குழந்தை ஏசுவும் இருப்பது போன்ற சகாயமாதா படங்கள் மொத்தம் நான்கு எனவும் இது அவற்றுள் ஒன்று  எனவும்..நமது இந்தியாவில் சென்னையில் யேசுவின் அப்போஸ்த்தலராகிய புனித தோமையார் குத்திக்கொல்லப்பட்ட பரங்கி மலையில் இருப்பதும் அவற்றுள் ஒன்று எனவும்
கூறப்படுகின்றது.]
    தேவதாயாரின் திருச்சன்னதியில் மனமுறுகி பிரார்த்தனை செய்த அந்த சவுதி அரேபியாவைச்சேர்ந்த தம்பதிகளுக்கு அப்போதே மாதாவின் அருள் கிடைத்ததுபோன்ற ஒரு பிரேமை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து திருப்தி அடைந்த அவர்கள் மேற்கொண்டு தங்கள் சுற்றுலாவை தொடர இஸ்ட்டபடாமல் தங்கள் தாய் நாட்டிற்கு திரும்பிச்செல்ல விரும்பினர். விமான நிலயத்தில் அந்த டிரைவருக்கு வேண்டிய பணத்தை கொடுத்த அவள் கணவன்," ஐய்யா.. உங்கள் சேவைக்கு நன்றி... உங்கள் உதவியால் நாங்கள் அந்த சைத்னயா மாதா கோயிலை தரிசித்தோம். மன நிறைவோடே செல்கின்றோம். எங்கள் வேண்டுதல் கேட்க்கப்பட்டால் நான் மீண்டும் இந்த டமாஸ்கஸ் வந்து உங்களுக்கும் அந்த மாதாவுக்கும் என் நன்றி தெரிவிப்பேன். எனவே உங்களுக்கு அப்போது நான் திரும்பிவரும் பட்சத்தில் 20000 அமெரிக்க டாலரும் அந்த சைத்னயா மாதாவுக்கு 80000 அமெரிக்க டாலரும் வெகுமதியாக தருவேன். இது உறுதி.நன்றி.வணக்கம்" என்று கூறிச்சென்றான்.
தங்கள் தாய்நாடு வந்தடைந்த அந்த சவுதி அரேபிய தம்பதியர்களுக்கு வெகு விரைவிலேயே நல்ல செய்தி அறிவிக்கப்பட்டது. ஆம் அந்த பெண் தாய்மை அடைந்திருந்தாள். அந்த முஸ்லீம் தம்பதியினர் அடைந்த மகிழ்சிக்கு அளவே இல்லை. அந்தப்பெண் தகுதியான ஒரு நாளில் அழகிய ஒரு ஆண் குழந்தையை பெற்றாள்.அந்த தம்பதியருக்கு இந்த உலகத்தின் அத்தனை செல்வங்களையும் தாங்கள் ஒரே நாளில் ஒரு குழந்தையை பெற்றதன் மூலம் அடைந்துவிட்டதாகவே நினைத்தனர். இப்போது அவள் கணவன் தான் நேந்துகொண்டதன்படி
தன் வேண்டுதலை செலுத்தும்படியாக மீண்டும் சிரியாவில் டமாஸ்கஸ் வந்து அந்த டிரைவரை சந்தித்தான். ஆனால் அந்த டிரைவரின் மனதில் சாத்தான் விஷவிதைகளை விதைத்தான்.
இங்கே தன்னிடம் வந்திருக்கும் இந்த சவுதி இளைஞன்... ஒரு பெரும் பணக்காரன். இவனைக்கொண்று போட்டால் நமக்கு மிகுந்த செல்வம் கிடைக்கும் " என்று எண்ணி தான் செய்யப்போகும் காரியத்துக்கு உதவியாக மேலும் இருவரை தன்னுடன் வரவழைத்தான். வந்திருப்பவர்கள் தன்னுடைய நண்பர்கள் என்றும் அவர்களும் சைத்னயா மாதாவுக்கு
வேண்டுதல் வைத்து அவர்களுடன் வருவார்கள் என்றும் இந்த சவுதி இளைஞனிடம் கூறினான். அவனும் மிகுந்த சந்தோஷப்பட்டு," நண்பா... இவர்கள் உனக்கு நண்பர்களானால் எனக்கும் நண்பர்களே... இவர்கள் என்னுடன் வருவதால் எனக்கும் சந்தோஷமே" என்றான். மேலும்," நண்பா... அன்று நான் சொன்னதுபோல் இந்தா உனக்கு 20000 அமெர்க்க டாலர்கள். உன் நண்பர்களுக்கும் 20000 டாலர்கள் என்று மொத்தம் 40000 அமெரிக்க டாலர்களாக அவர்களிடம் கொடுத்தான். 
   அந்த காசோடு திருப்த்தி அடையாத அவர்கள் அவனை தனியே வனாந்தரமான ஒரு இடத்திற்கு கூட்டிச்சென்று அவன் கழுத்தை அறுத்துக்கொலை செய்தார்கள். அவன் தலை வேறு, கைகள் வேறு, கால்கள் வேறாக  வெட்டிப்பிரித்தார்கள். அத்தோடு நில்லாமல் இவனை இங்கேயே புதைத்தால் தெரிந்துவிடும் என்று எண்ணிய அவர்கள் அவனை ஒரு சாக்குமூட்டையில் கட்டி தங்கள் காரின் பின் டிக்கியில் வைத்து வேறு ஒரு இடத்திற்கு எடுத்துச்சென்று பாலைவனத்தில் புதைத்துவிட எடுத்துச்சென்றார்கள். அந்த சவுதி வாலிபனுடைய தங்கச்சங்கிலி, கைகடிகாரம், அவனிடமிருந்த அனைத்து அமெரிக்க டாலர்கள் ஆகிய அனைத்தையும் எடுதுக்கொண்டார்கள். வெகு தூரத்தில் சைத்னயா மாதாவின் மலைகோயில் தெரிந்தது.
   ஆனால் விதி வேறு விதமாக வேலை செய்தது. அதிவேகமாக சென்றுகொண்டிருந்த அந்த நவீன சொகுசுக்கார் அந்த பிரதான சாலையின் நடுவிலேயே சடக்கென நின்றது.அந்த டிரைவருக்கும் அவனுடன் வந்த மற்ற இருவருக்கும் இந்த கார் ஏன் நின்றது என தெரியவில்லை. சாதாரணமாக அந்தக்கார் பழுதடையவே அடையாது. இப்போது எப்படி
பழுதானது என அவர்கள் மண்டையை குடைந்துகொண்டார்கள். அப்போது வெகு வேகமாக பைக்கில் அவர்களைக்கடந்து சென்றான் ஒருவன். இவர்களின் சொகுசுக்கார் நடு ரோட்டில் பழுதடைந்து நிற்பதைக்கண்ட அவன் அங்கே நிறுத்தி அவர்களிடம்," ஏன் உங்கள் கார் நின்றுவிட்டது... உங்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமா?" என்றான். ஆனால் அவர்கள் மூவரும் " நீ உன் வேலையை பார்த்துக்கொண்டு போ... உன் உதவி எங்களுக்குத்தேவை இல்லை " என்றனர்.
   இவர்களை பார்த்தமாத்திரத்தில் அவர்கள் முகம் போன போக்கைப்பார்த்த அந்த பைக்ஓட்டி இதில் ஏதோ பிரச்சனை இருகின்றது போலும் என நினைத்து திரும்பிச்சென்றான். போகும் முன்பாக அந்த சொகுசுக்காரின் பின் பானட்டிலிருந்து ரத்தம் வடிந்துகொண்டிருந்தை கவனித்தான். பிறகு தன் பைக்கை ஓட்டிக்கொண்டு போனவன் அருகிலிருந்த போலிஸ் ஸ்டேஷனின் முறையிட்டான். அடுத்த ஐந்தாவது நிமிடம் டமாஸ்கஸ் போலீஸ் அந்த மூன்று பேரையும் கைது செய்தது. தாங்கள் இந்த டமாஸ்கஸ் போலீஸிடம் வகையாக மாட்டிக்கொண்டதை அறிந்த மூவரும் அதிருந்து போனார்கள். 
   போலீஸ் மிகவும் கடுமையாக," இந்த காரின் பின் பேனட்டைத்திற...ஏன் இங்கிருந்து ரத்தம் வருகின்றது?" என்றனர். வேறு வழி இல்லாத அந்த மூவரும் அந்த காரின் பின் பேன்ட்டை திறந்தனர்.
அப்போது யாரும் எதிர்பாராதபடி ஒரு புதுமை நடந்திருந்தது.
   காரின் பின் பேனட்டிலிருந்து உயிரோடு திடீரென எழுந்தான் அந்த சவுதி அரேபிய இளைஞன்." அப்பாடா.. இப்போதுதான் குழந்தை யேசுநாதர் எனக்கு உயிர் கொடுத்தார். இந்த கார் டிரைவர்தான் என்னை கழுத்தை அறுத்து கொலை செய்தான். இவன் தான் என் தலையை அறுத்து துண்டித்தான். இவன்தான் என் கைகளை வெட்டித்துண்டித்தான்.
இவன்தான் என் கால்களை வெட்டித்துண்டித்தான். அதோ அந்த மலையில் இருக்கு சைத்னயா மாதாவும் அவர் திரு மகன் யேசுவும் வந்து எனக்கு உயிர் கொடுத்தார்கள். யேசுநாதர் என் தலையையும் கைகால்களையும் சேர்த்து தைத்து ஒட்டவைத்து எனக்கு உயிர்கொடுத்தார். இதோ பாருங்கள் எனக்கு கழுத்திலும் கை கால்களிலும் போடப்பட்ட
தையல்கள்" என்றான்.[ யேசுவுக்கே புகழ்]. அந்த கொலைகாரகள் மூவருக்கும் அப்போதே பைத்தியம் பிடித்திருந்தது. அந்த கொலைகாரர்களிடமிருந்து அந்த சவுதி வாலிபனுடைய அனைத்து பொருட்க்களும் பரிமுதல் செய்யப்பட்டன. இந்த பொருட்க்கள் யாவும் அந்தக்கொலைக்கு சாட்ச்சியமாயின. இதைப்பார்த்த அந்த டமாஸ்கஸ் போலீசாருக்கு இதை நம்புவதா என்றே புரியவில்லை. மேலும் அவனை அப்போதே உடனடியாக மருத்துவ ஆய்வுக்காக அனுப்பினர்கள். அவர்களும் அவனை நன்றாக ஆய்வுசெய்து " ஆம்...கொலை நடந்திருகின்றது. ஆனாலும் இவனுக்கு உயிர் வந்திருப்பது ஆச்சர்யமே... இதை இவனுடைய கழுத்திலிருக்கும் இணைப்புகளும் கைகால்களில் இருக்கும் இணைப்புகளும் நிரூபிகின்றன" என்றனர்.
     இதைத்தொடர்ந்து இந்த சவுதி இளைஞனுடைய உறவினர்கள் சிரியாவுக்கு வரவழைக்கப்பட்டு நடந்த செய்திகளை கேட்டறிந்தார்கள்.இந்த இளைஞனுக்கு நேர்ந்த அபாயமும் அவனுக்கு ஏற்பட்ட உயிர்ப்பையும் கேட்டறிந்த முஸ்லீம் சமுதாயமும் முஸ்லீம் உலக நாடுகளும் மிகவும் ஆச்சரியப்பட்டது. இந்த சவுதி இளைஞனுடைய பேட்டியை ரேடியோ, தொலைகாட்ச்சி, செய்தித்தாள்கள் மேலும் இன்டெர்னெட் போன்ற அனைத்து ஊடகங்களிலும் ஒலிபரப்பாகின.
      இன்றைய கால கட்டங்களில் ஊடகங்களின் ஆதிக்கம் பெருத்துவிட்ட இந்த நாட்களிலும் தலை வெட்டிக்கொல்லப்பட்ட ஒருவனை யேசுநாதர் உயிர்பித்திருகின்றார் என்று அறியவரும்போது வேத காலத்திலிருந்து நம்பப்பட்டுவரும் சரீர உத்தானத்தை விசுவாசிகிறேன்,நித்திய ஜீவியத்தை விசுவாசிகிறேன் என்னும் விசுவாசப்பிரமாணங்கள் எவ்வளவு வலிமையான நம்பிக்கையையும் வல்லமையான தீர்க்கதரிசங்களையும் வேதம் வெளிப்படுத்துகின்றது என்பதற்கு இந்த முஸ்லீம் வாலிபனுடைய உயிர்ப்பு ஒரு தகுந்த உதாரணமாகும்.
        மனிதனின் இறப்பு எத்தகையதாக இருந்தாலும் அவன் மரித்து எரித்து சாம்பலாக்கப்பட்டிருந்து தூசுவாக மாறியிருந்தாலும் யேசுநாதர் அவனையும் உயிபிக்க வல்லமையானா தேவன்  என்பதை இந்த உலகம் உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்கு சைத்னயாவில் கொல்லப்பட்ட அந்த சவுதி முஸ்லீம் வாலிபனுக்கு நடந்த இந்த புதுமை இக்காலத்தில் தேவயான  ஒன்றுதான்..
     கொலை செய்த அந்த மூவருக்கும் பைத்தியம் பிடித்திருப்பதுபற்றி போலீஸ், மற்றும் மருத்துவ அறிக்கையின்படி அவர்கள் மூவரும் மன நலன் குன்றியவர்களுகான சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பபட்டதாக ஒரு செய்திக்குறிப்பு கூறுகின்றது.
பத்து வருடங்களுக்குப்பின் அதாவது டிசெம்பெர் 2004 ல நடைபெற்ற இந்த சம்பவம் பற்றி இந்த சவுதி வாலிபன் பேசும்போது அப்போது தான் முஸ்லீம் ஆக இருந்தேன் என்றார்.
தற்போது அவரும் அவரது குடும்பத்தார் அனைவரும் கிறிஸ்த்துவர்களாக மாறினார்களா என்பதுபற்றி ஏதும் செய்தி இல்லை. இது அவரது பாதுகாப்பை முன்னிட்டு வெளிப்படுத்தாமல் இருக்கலாம்.
      சிரியா நாட்டில் டமஸ்கஸ் நகரில் ஒரு முஸ்லீம் வாலிபனுக்கு நேர்ந்த புதுமையப்பொருத்தவரை இது மாதாவுக்கும் யேசுவுக்கும் பெரும் புகழை தேடி தந்திருகின்றது என்றாலும் தற்போது அங்கு பெரும் அரசியல் மாற்றம் நடைபெற்றுவருவதால் தினசரி அங்கு நடக்கும் ராணுவ நடவடிக்கைகளிலும், உள் நாட்டுக்கலவரத்திலும் பாதிக்கப்படும் அப்பாவி பொதுமக்களாகிய கிறிஸ்த்துவர்கள் படும் பாடும், முஸ்லீம்கள் படும் பாடும் வார்த்தைகளில் சொல்லி முடியாது. 
     ஆனாலும் அங்கும் தேவ தாயாரும் அவரது திருமகனும் தங்களுடைய பிள்ளைகளான அனைவருக்கும் பெரும் சகாயம் செய்து தினமும் அங்கே பெருமளவு புதுமைகள் நிகழ்த்தி பல்லாயிர கணக்கானவர்களை காத்து ரட்ச்சித்து வருகின்றார்கள் என்பதே உண்மை. 
    சைத்னயா உண்மையில் மஹா சக்தி உள்ள அதிசய மாதா என்பது நிரூபணமான உண்மை. இனி இந்த சைத்னயா மாதாவைப்பற்றிய சரித்திரம் காண்போம்.
இந்த சரித்திரம் நடைபெற்றபோது காண்ஸ்டாண்டி நேபிள்ஸ் [ இன்றைய துருக்கி ] நாட்டை ஆண்ட மன்னன் ஜஸ்டீனியன். அவர் தன் ராஜ்ஜிய பரிபாலனம் பற்றியும் புனிதநகரான ஜெருசலேம் நகரை தரிசிக்கும்படியோ அல்லது அன்றைய பெர்சியா [இன்றைய ஈரான் ] நாட்டின்மீது படை எடுக்கும் மொருட்டோ இந்த சிரியா நகரத்தை சேர்ந்த டமாஸ்க்கசுக்குவரும்போது இந்த சைத்னயா நகரின் அருகில் முகாமிட்டிருந்தார். அப்போது அவருக்கும் அவரது சேனைவீரர்களுக்கும் கடும் தாகமும் களைப்பும் ஏற்படவே எங்காவது நல்ல தண்ணீர் ஊற்று இருக்குமோ என தேடிக்கண்டுபிடிக்க சொன்னார். அப்போது மன்னர் ஜஸ்ட்டீனியனுக்கு ஒரு நல்ல கலைமான் தென்பட்டது. அந்த கலைமானை தானே வேட்டையாடும் பொருட்டு மன்னன் ஜஸ்டீனியன் தன் வில் அம்பை எடுத்துக்கொண்டு அதைப்பின் தொடர்ந்து ஓடினார். அந்த கலைமான் அவரை வெகு தொலைவிற்கு கூட்டிச்சென்றது.
    பின் ஒரு இடத்தில் நின்றது. அந்த இடத்தில் நல்ல தெளிந்த நீரூற்றும் இருந்தது. மன்னன் ஜஸ்டீனியன் அந்த மானை வேட்டையாட தன் வில்லில் அம்பை தொடுத்தார். அப்போது ஒரு புதுமை நிகழ்ந்தது.
    அந்த அழகிய கலை மான் உடனே ஒரு அழகிய யுவதியக மாறியது. மேலும் வானில் வர்ணஜாலங்கள் தோன்றின. கண்கூசும்படியான ஒரு ஒளியும் தோன்றியது.. திடீரென அந்த அழகிய யுவதி மறைந்து ஒரு அழகிய தாயும் அவரது ஆண்குழந்தையும் இருப்பது போன்ற ஒரு ஓவியம் தோன்றியது. ஆனால் அந்த ஓவியத்தின் வலது கை உயிர்பெற்று
மன்னன் ஜஸ்டீனியனை நோக்கி, " மன்னா ஜஸ்டீனியா ... உன் வில்லையும் அம்பையும் கீழே போடு... நாமே சைத்னயா மாதா.. இதோ இந்த மலையில் வாசம் செய்கிறோம். இங்கிருந்துகொண்டு நாம் நம் மக்களை காப்போம். இங்கே நமக்கு ஒரு தேவாலயம் அமைப்பாயாக " என்றார். மன்னன் ஜஸ்டீனியன் திகைத்து அந்த இடத்திலேயே தேவதாயாருக்காக  ஒரு மாதா கோயிலைக்கட்ட ஆணையிட்டான். ஆனால் அந்த மலை சிகரத்தில் தேவதாயாருக்காக ஒரு தேவாலயம் கட்டும் அளவுக்கு இடமில்லே எனவும் அங்கு தேவாலயம் அமைக்க சாத்தியம் இல்லை என அவனது கட்டிடக்கலை நிபுணர்கள் கூறியதால் ஜஸ்டீனியன் பெரும் வருத்தமடைந்தான். இவ்விதமாக பல காலம் கடந்தது.
ஒரு நாள் மன்னன் ஜஸ்டீனியன் கனவில் தேவதாயாரானவள் தோன்றி தனக்கு ஏன் இன்னும் தேவாலயம் கட்டவில்லை என வருத்தம் தெரிவிததாள்.
    மன்னன் ஜஸ்டீனியன் அந்த மலையின் சிகரத்தில் தேவாலயம் கட்டும் அளவுக்கு வசதிகள் இல்லை.. எனவே தன்னால் அங்கு தேவாலயம் கட்ட முடியாமல் போயிற்று என்றான். ஆனால் தேவ தாயார் அங்கு அந்த மலையின்மீது தனக்கு ஒரு தேவாலயம் அமைக்க தகுதியான ஒரு வரைபடத்தை தானே வரைந்து கொடுத்தாள் எனவும் அதன்படியே அங்கே அவள் புகழ்பரவும்பொருட்டு சைத்தனயா மாதாவின் தேவாலயம் கட்டுவிக்கப்பட்டதாக இந்த தேவாலயத்தின் ஸ்தல புராணம் கூறுகின்றது. 
    இந்த தேவாலயத்தின் உட் புறத்தில் தேவதாயாரின் பலவிதமான வண்ணப்படங்கள் இருகின்றன. இதில் தேவதாயார் தன் திருமகன் பாலன் யேசுவை கையில் ஏந்திய வண்ணம் இருக்கும் ஒரு படம் மிகவும் புகழ் வாய்ந்ததும் சக்தி உடையதானதாகவும் இருப்பதாக கூறப்படுகின்றது. திரு யாத்திரிகர்களாக வரும் மாதாவின் பக்தர்கள் அனைவரும் இந்த தெய்வீக படத்தின் முன்பாகவே மண்டியிட்டு வணங்கி தங்களின் வேண்டுதலையையும் நேர்ச்சியையும் செலுத்துகின்றார்கள்.
 இந்த சைத்னயா அதிசய மாதாவின் திருப்படத்தைப்பற்றிய ஒரு சரித்திரம் பின்வருமாறு.
கி.பி. எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த எகிப்த்து நாட்டை சேர்ந்த துறவி தியோடொர் என்பவர் கிரேக்க நாட்டிற்கு செல்லும் வழியில் இந்த சைத்னயா மாதாவை தரிசித்து இங்கிருந்த கன்னிமாடத்தில் தங்கினார். அப்போது அங்கிருந்த சபைத்தலைவி புனித மரியா என்பவர் இந்த தியோடோர் என்னும் துறவியை நன்றாக உபசரித்து அவருக்கு தேவையான உதவிகளை செய்தார். அந்த துறவியும் இங்கிருந்து நேரே புனித பூமியான ஜெருசலேமை பார்த்துவிட்டு மீண்டும் கிரேக்க நாடு செல்ல உத்தேசித்திருப்பதாக கூறினார்.
    எனவே அந்த சபைத்தலைவி புனித மரியா அந்த துறவி தியோடரிடம் ஒரு வேண்டுதலை கேட்டார். அதாவது ஜெருசலேமில் இருந்து அவர் திரும்பி வரும்போது இந்த சைத்னயாவுக்கு திரும்பிவரவேண்டும் எனவும் அப்போது தனக்காக ஜெருசலேமிலிருந்து மாதாவும் அவர் திருமகன் யேசுவும் இருப்பது போன்ற அழகிய திருப்படம் தங்களுகாக வாங்கி வர  வேண்டுமெனவும் மிகவும் கேட்டுக்கொண்டார்.
    துறவி தியோடரும் தான் ஜெருசலேமிலிருந்து திரும்பிவரும்போது அவசியம் அவர் கேட்டுக்கொண்டபடி அந்த மாதாவின் திருப்படத்தை வாங்கிவருவதாக கூறினார். ஜெருசலேம்  சென்ற அந்த துறவி தியோடருக்கு அங்கே சைத்னயாவில் அந்த கன்னிகா ஸ்திரி கேட்டுக்கொண்டபடி தேவதாயாரின் படம் வாங்கி வரும் நினைப்பு இருந்தாலும் வேண்டுமெனவே  அதை தவறவிட்டவர்போல தன்வழியே திரும்பினார். ஆனால் அவர் சைத்னயா மாதாவால் ஆட்கொள்ளப்பட்டார்.
" தியோடொர் நீர் ஜெருசலேமில் ஏதேனும் தவறவிட்டு வந்துவிட்டீரா?" என்னும் குரல் அவருக்கு மிகவும் தெளிவாக கேட்டது. ஆனாலும் அவர் தன்பயணத்தை தொடர்ந்தார்.
" தியோடொர்..நீர் ஜெருசலேமில் நம் திருப்படத்தை வாங்கிவரும்படி அந்த சபைத்தலைவிக்கு வாக்கு கொடுத்திருந்திருந்தும் நீர் செய்யாமல் போவதேன்?" என்னும் குரல் மீண்டும் மிகவும் தெளிவாக தியோடோர் என்னும் துறவிக்கு கேட்டதால் அவர் பயந்து மீண்டும் ஜெருசலேம் வந்து அந்த சபைத்தலைவி மரியாள் கேட்டுக்கொண்டபடி மாதாவின் அழகிய திருப்படத்தை வாங்கிவந்து தன் பயணத்தை தொடர்ந்தார்.
இந்த திருப்படத்தை அவர் வேறு எங்கும் வைக்காமல் தன் கையாலேயே வைத்துக்கொள்ளும்போது அவர் ஒரு பாதுகாப்பை உணர்ந்தார். தேவதாயார் தன் தாசன் தியோடருக்கும் அவரது சீடர்களுக்கும் கள்வர்கள் தொல்லையிலிருந்து பாதுகாத்தார். மேலும் பல வனவிலங்குகளின் தொல்லையிலிருந்தும் தேவதாயார் இவர்கள் அனைவரையும் பாதுகாத்தார்.
இவை அனைத்தையும் உணர்ந்த தியோடர் என்னும் அந்த எகிப்திய துறவி அந்த திருப்படத்தை சைத்னயா தேவாலயத்தை சேர்ந்த கன்னியர் மடத்தலைவி மரியாளின் வசம் ஒப்புவிக்க மனம் வராமல் தானே வைத்துக்கொள்ள விரும்பினார். எனவே சைத்னயா ஊருக்கு செல்லாமல் அதை தவிர்த்து கடல்வழியே எகிப்த்து நாட்டுக்கு செல்ல விரும்பி  கப்பல் ஏறினார். ஆனால் தேவதாயார் விடவில்லை. இதனால் கடலில் எழுந்தது பெரும் புயல். கப்பலோட்டி இயற்கையை மீறி தன்னால் கப்பலை செலுத்த இயலவில்லை என மீண்டும்  கப்பலை துறைமுகம் திருப்பினான்.
    இதனால் பயந்துபோன தியோடொர் மீண்டும் சைத்னயா வந்தார். திரும்ப சைத்னயா வந்தும் அவருக்கு அந்த மடத்துதலைவியிடம் அந்த மாதாவின் திருப்படத்தை ஒப்படைக்க  மனம் வரவில்லை. எப்படியோ ஒரு நான்கு நாள் சைத்னயாவிலேயே தங்கி அந்த சபைத்தலைவியிடம் சொல்லிக்கொள்ளாமலேயே வெளியேறிவிட முடிவு செய்தார். ஆனால் அந்த  கன்னிமாட கதவு திறவாமல் பெரும் சுவர் ஒன்று எழும்பி அவரை தடை செய்தது. நடந்த அனைத்தும் மாதாவின் திருச்செயலே என எண்ணிய அந்த துறவி தன் தவறை உணர்ந்து  நடந்த யாவற்றையும் அந்த கன்னிமாடத்தலைவி புனித மரியாளிடம் சொல்லி மன்னிப்புக்கேட்டுக்கொண்டார். பிறகு அந்த தேவதாயாரின் திருப்படத்தை அவரிடம் ஒப்படைத்தார்.
    அன்றிலிருந்து அந்தப்படம் அங்கேயே நிலைகொண்டது. அந்த புனிதமான சைத்னயா மாதாவின் திருப்படம் யேசுநாதரின் சீடரும் சுவிசேஷகருமான புனித லூக்காவால்  வரையப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்த புதுமையான திருப்படம் சைத்னயாவுக்கு வந்ததுமுதல் இந்த தேவாலயத்துக்கு வரும் பக்தர்களுக்கு கேட்டது கிடைத்தது.
சைத்னயா மாதாவை தரிசிக்க வரும் பக்தர்களின் காணிக்கையும் அதிகரித்தது. எனவே மாதாவின் அந்த திருப்படத்திற்கு பக்தர்கள் வெள்ளிக்காப்பு அணிவித்து மகிழ்ந்தார்கள்.
மேலும் பல வெள்ளி சொரூபங்களும் சிலுவைகளும் பக்தர்களின் காணிக்கையாக இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவை இங்கே பக்தர்களுக்கு கிடைத்த வேண்டுதலுக்கு  சாட்ச்சியமாக நிற்கின்றன.
பைசாந்திய பேரரசனாகிய ஜஸ்டீனியன் கி.பி.547ல் சைனயாவில் இந்த தேவாலயத்தை கட்டுவித்தான். அந்த தேவாலயம் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி தேவமாதா அமல உற்பவியாக இந்த பூ உலகில் அவதரிதத அந்த நாளிளேயே கடவுளுக்கு காணிக்கையாக ஒப்புகொடுக்கப்பட்டு அன்று முதல் ஒவொவொரு ஆண்டும்
செப்டெம்பேர் 8 ஆம்தேதி இந்த சைத்னயா மாதாவின் திரு நாளாக கொண்டாடபட்டு வருகின்றது.
       பதி மூன்றாம் நூற்றாண்டுகளிள் இந்த புனித சைத்னயா மலையின்மீது அமைந்துள்ள சைத்னயா மாதாவின் திரு உருவ படத்தை தரிசிக்க வந்திருந்த மெஜிஸ்டெர் தித்மார்  என்னும் ஒரு ஜெர்மானியர் இவ்வாறு கூறுகின்றார். " இந்த சைத்னா மாதாவின் மார்பு பகுதியிலிருந்து சுரந்துவரும் ஒரு வித எண்ணெய்யானது சகல விதமான வியாதிகளையும்
போக்கவல்லது" என்று தான் கண்டறிந்ததாக கூறுகின்றார். மேலும் இந்த காலகட்டங்களில் அதாவது செப்டெம்பெர் 1240 களில் எகிப்த்திய சுல்தானிடமிருந்து பெறப்பட்ட ஒரு  உத்திரவாதமனது இந்த சைத்னயா தேவாலயத்தை தரிசிக்க வரும் கிறிஸ்த்துவ பக்தர்களுக்கு முஸ்லீம்களால் யாதொரு துன்பமும் நேராதபடி காத்தது எனவும் கூறப்படுகின்றது.
பதிமூன்றாம் நூற்றாண்டை சேர்ந்த டெம்ப்லார் வீரர்கள் இந்த சைத்னயா தேவாலயதிற்கு வந்து இங்கே கிடைக்கும் இந்த புனித எண்ணெய்யை வாங்கிச்சென்று தங்களுடைய  தாய் நாட்டிற்கு கொண்டு சென்று தங்கள் தாய் நாட்டிலும் இந்த சைத்னயா மாதாவின் பக்தியை பரப்பினார்கள் என்கிறது ஒரு சரித்திர குறிப்பு.
      இப்போதும் இந்த ஆலயதிற்கு வரும் பக்தர்கள் இந்த சைத்னயா மாதாவின் முன் சாஸ்டாந்தமாக விழுந்து வணங்கியபின் அருகில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு கிண்ணத்திலிருந்து இந்த பரிசுத்த எண்ணெய்யை தொட்டு தங்கள் நெற்றியில் சிலுவை அடையாளமிட்டுக்கொண்டு தங்கள் வேண்டுதலையோ அல்லது நேர்ச்சியையோ ஆரம்பிகின்றார்கள். தங்கள்  வழிபாட்டுக்காரியம் முடிந்தபின் இங்குள்ள கன்னிகைகள் ஒரு பஞ்சினால் இந்த பரிசுத்த எண்ணெய்யை நனைத்து ஞாபக பொருளாக கொடுகின்றார்கள்.     அவரவர் கலாச்சாரத்தின்படி தேவையான பரிசுத்த எண்ணெய் அந்த மடத்து கன்னியர்களாள் வழங்கப்படுகின்றது. சிலர் தங்கள் வேண்டுதல் ஜெபித்து முடியும் வரை இந்த கிண்ணத்திலிருந்து இந்த பரிசுத்த எண்ணையை ஊற்றிகொண்டே இருப்பார்கள். இதற்காகவே இங்குள்ள கன்னிகைகள் இங்கு வரும் பக்தர்களின் வழக்கத்தை கேட்டு தெரிந்துகொண்டு அதற்கேற்றாற்போல் அந்த  எண்ணையை வழங்கி வருகின்றார்கள்.
   ஹெலியனியர்களின் சகாப்த்தத்திலிருந்து சைத்னயா அமைதுள்ள இந்த மாகாணம் அபிலென் என அழைக்கப்பட்டது.. வேத காலத்தில் ஆதாமின் மகனான காயீனால் கொல்லப்பட்ட அவன் சகோதரன் ஆபேலின் கல்லறை இங்குதான் இந்த மாகாணத்திலேயே அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த அபிலென் மாகாணத்தில் ஒரு குன்றின்மீது  ஆபேலின் பெயரால் கட்டபட்டுள்ள ஒரு மசூதியின் உள்ளே ஆபேலின் சமாதி அமைந்துள்ளது.
       மேலும் தொல்பொருள் ஆராய்சியாளர்கள் பூர்வீகத்தில் இந்த அபிலென் மாகாணத்தின் தலை நகரே இந்த சைத்னயாவாகத்தான் இருக்கும் என்றும் கருதுகிறார்கள். 
ஆக தேவதாயார் அவர்கள் ஒரு காரணத்தோடுதான் இந்த சைத்னயா என்னுமிடத்தை தான் வசிக்கும் இடமாக தேர்ந்து கொண்டார் போல் இருகின்றது. தேவதாயாரானவர் இந்த  சைத்னயா மலைமீது அமர்ந்தபடி இந்த நகரத்தையும் சிரியாவையும் அந்த லெபனான் நாட்டையும் பார்த்துக்கொண்டே இருப்பதுபோல தன் ஆலயத்தை இந்த உயரமான சைத்னயா  மலைமீது அமைத்துக்கொண்டு அனுதினமும் அருள்பாலித்துக்கொண்டே இருகின்றார் என்றால் அது மிகை ஆகாது.
   இந்த சைத்னயா மாதாவின் திருப்படத்தை பிரதி எடுத்தாற்போன்று பல இடங்களிலும் அவரது பக்தி முயற்சி பரப்ப பட்டது. இப்படியாக இந்த சைத்னயாமாதாக்கோயிலை கட்டுவித்த ஜஸ்டீனியன் மன்னன் ஆண்ட அந்த பைசாந்திய தேசத்திற்கு ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டது. கி.பி.910ல் ருஸ்யா தேசத்திலிருந்த வந்திருந்த ஒரு முறட்டு காட்டுமிராண்டிகள் இந்த  காண்ஸ்டாண்டி நேபிள்ஸ் நகரத்தை [ அன்றைய பைசாந்தியம் இன்றைய துருக்கி ] தங்கள் கப்பற்படைகளாள் சூழ்ந்துகொண்டு முற்றுகை இட்டனர். இந்த பைசாந்திய மக்கள் இந்த  முறட்டு ருஸ்ய காட்டுமிராண்டிகளிடமிருந்து தங்கள் தேசத்தை காக்கும்படியாக ப்ளாக்கர்னே என்னும் தேவாலயத்தில் அமைந்திருந்த இந்த சகாய மாதா படத்தின் முன்பாக  மனமுருகி வேண்டிக்கொண்டார்கள்.
    அப்போது பாலஸ்தீனத்திலிருந்து தோமையாரால் கொண்டுவரப்படிருந்த மாதாவின் இடுப்புக்கச்சையை இந்த கடற்கறையில் நனைத்தபோது ஒரு பெரும் அதிசயம் நிகழ்ந்தது.
கடல் உடனே ஆர்த்தெழுந்தது. பெரும் ஆழிப்பேரலைகள் பெரும் ஆர்ப்பாட்டமாக கிளர்ந்தெழுந்தன. எதிரிகளாகிய ருஸ்ய காட்டு மிராண்டிகளின் கடற்படை கப்பல்கள் கடலில் வெகு தூரத்திற்கு இழுத்துச்செல்லப்பட்டன. அவர்களின் கடற்படை முழுவதுமாக கடலில் சிதறடிக்கப்பட்டதால் இந்த கான்ஸ்டாண்டி நேபிள்ஸ் மக்கள் [ பைசாந்தியர்கள் ] தேவதாயாரின்  இந்த சகயமாதா பக்த்தியினால் காப்பாற்றப்பட்டார்கள்.
இந்தியாவில் இந்த சைத்னயா மாதாவின் திருப்படம் சகாயமாதா என அழைக்கப்படுகின்றது. இரட்சகர் சபை சபை துறவிகளாள் இந்த சகாய மாதா பக்தி பரப்பப்பட்டு வருகின்றது.
உலகமெங்கும் இந்த சைத்னயா மாதாவின் திருப்படத்தை மாதிரியாக வைத்து வரையப்பட்டுள்ள படங்களும் பல நாடுகளில் பல அதிசயங்களை செய்து வந்துள்ளன. இன்றளவும் அந்தசைத்னயா எனப்படும் அதிசய சகாய மாதா தன்னை நாடி வரும் பக்த்தர்கள் அனைவருக்கும் இனம், மொழி, நாடு, கலாச்சாரம் அனைத்தையும் கடந்து அருள் பாலித்து வருகின்றார்.
சைத்னயா மாதா எனப்படும் அதிசய சகாய மாதாவே பாவிகளாய் இருகிற எங்களுக்காக இப்போதும் எப்போதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிகொள்ளும். ஆமென்.









No comments:

Post a Comment