Saturday, June 1, 2013

"கழுதைக்குத்தெரியும் கற்பூர வாசனை"

"கழுதைக்குத்தெரியும் கற்பூர வாசனை"


டம். டம். டம்”. என்னும் டமார ஒலி கலிலேயா முழுவதும் ஒலித்தது. அது நசரேத் என்னும் சிற்றூரிலும் ஒலித்தது. அகஸ்து ராயன் ஆணைப்படி மக்கள்தொகை கணக்கெடுப்பு  பற்றிய தண்டோரா அறிவிப்பு அது. ஆயிற்று. வேறு வழி இல்லை. இக்காலத்தைப்போல வீட்டிற்கே வந்து அரசாங்க அதிகாரிகள் மக்கள் தொகை பற்றிய கணக்கெடுப்பு முறை அக்காலத்தில் இல்லை.அவரவர் சொந்த ஊரில் நேரில் சென்று ஆஜராகி அரசாங்க அதிகாரிகளிடம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.செலுத்தப்படாத வரிகள்,கிஸ்திகளாகியவற்றை
பைசா சுத்தமாக பைசல் செய்யப்படவேண்டும். அரசாங்க கஜானா காலியானதால் சீசருக்கு வேறு வழி தெரியவில்லையாம். மேலும் இந்த கணக்கெடுப்பில் ஒவ்வொரு வீட்டிலும் ஆண்கள் பெண்கள் எத்தனை பேர்? அவர்களில் தேடப்படும் குற்றவாளிகள் யாரேனும் உள்ளனறா? போன்ற விபரங்களையும் கண்டுகொள்ள முடியும். எனவே கெடுபிடி கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. இந்த சூழ்நிலையில் தேவ மாதாவுக்கு நிறைமாதம் ஆகி இருந்தது. என்ன செய்வது?அரசாங்க ஆணைக்கு கட்டுப்பட்டுதான் ஆக வேண்டும். எந்த சாக்குப்போக்கும் சொல்ல முடியாது. எனவே சூசையப்பர் தன் பத்தினியை அழைத்துக்கொண்டு தன் சொந்த ஊரான பெத்லஹேமுக்கு செல்ல வேண்டி அதற்கான ஆயத்தங்களை செய்தார். அவர் பேரரசர் தாவீதின் கோத்திரமல்லவா ஆகவே அவர் தாவீதின் சொந்த ஊரான பெத்லஹேமுக்கு பயணம் மேற்கொண்டார். வழிச்செலவிற்கு பணம் துணிமணிகள், சில தட்டுமுட்டு சாமாண்கள் ஆகியவற்றுடன் மாதாவையும் ஒரு பெண் கழுதையின் மேலேற்றிக்கொண்டு பயணம் ஆரம்பமாயிற்று. அந்த பெண் கழுதைக்கு குட்டி ஒன்று இருந்ததால் அதையும் சேர்த்துக்கொண்டு பயணித்தார்கள்.
      இந்த திருப்பயணத்தைப்பற்றிய கதைகள் மிகப்பல உண்டு. மாதாவும் சூசையப்பரும் பட்ட கஸ்டங்கள் நிந்தைகள் எனற நிகழ்வுகள் மிக அதிகம். ஆனால் இந்த கதை ஒர் கழுதை பற்றியதால் நாம் அதைபற்றிய விபரங்களைப்பார்ப்போம். ஒரு வழியாக திருக்குடும்பம் பெத்லஹேமை அடைந்தது. கடவுளின் திருவுளப்படி அவர்கள் ஒரு மாட்டுக்கொட்டியில் தங்கினர். அந்த மாட்டுக்கொட்டில் ஒரு குகையில் அமைந்திருந்தது. அந்த குகை உலகம் உண்டானதுமுதல் இருந்தது. முதல் மனிதன் ஆதாமும் அவன் மனைவி ஏவாளும் இந்த குகையில்தான்
பல காலம் வாழ்ந்தார்கள். ஆதாமுக்கு காயின் ஆபேல் என்னும் இரு புதல்வர்களும் மறைந்தபின், அதாவது தன் தம்பி ஆபெலை அண்ணன் காயின் கொலைசெய்தான். எனவே அவன் கடவுளால் சபிக்கப்பட்டு நாட்டைவிட்டு ஓடிப்போனான். ஏவாள் மீண்டும் கருத்தாங்கி இந்த குகையிலேயே பிரசவித்தாள். பிறந்தது ஆண் குழந்தை.அவனுக்கு ஆண்டவன் அருள் என்னும் பொருள்கொண்ட ” சேத்” என்ற பெயர் வைத்தார்கள். இதே குகையில் ஏவாள் பிரசவித்த அதே இடத்தில் அன்னை மரியளும் யேசுபாலனை பெற்றாள். ஆக இந்த குகை
எப்பேர்ப்பட்ட பாக்கியம் பெற்றது என்று நாம் அறிந்துகொள்ளளாம். ஆண்டவன் அருள் என்னும் பேர் பெற்ற சேத் என்னும் மனிதன் மூலம் மீண்டும் மனித இனம் தோன்றியது. ஆதாம் ஏவாளின் காயின் ஆபேல் இவர்கள் சந்ததியோடு ஆண்டவன் அருள் என்னும் பேர்பெற்ற சேத் என்னும் மனிதன் மூலம் பிறந்த மனித இனத்தை மீட்க ஆண்டவர் நம்மோடு என்னும் பெயர்கொண்ட எம்மானுவேல் என்னும் யேசுநாதர் பிறந்தது எப்பேர்ப்பட்ட பொருத்தம். அவர் பிறந்த பெத்லஹேம் என்ற ஊரின் பெயருக்கு எபிரேய மொழியில் ரொட்டிக்கடை என்றும் அரேபிய மொழியில் கறிக்கடை[இரைச்சிக்கடை] என்றும் பெயர். ஆக கடவுள் யேசுநாதராக மனிதாவதாரம் எடுக்கவேண்டி தான் பிறந்த ஊர் பெயரையும் முதற்கொண்டு காரணத்தோடு தான் தெரிந்திருக்கிறார். [ நானே உயிர்தரும் உணவு, நானே உலகின் பாவங்களைப் போக்கவந்த செம்மரி ஆட்டுக்குட்டி என்னும் வசனங்களை நேயர்கள் நினைவு கொள்ளவும்] . ஆண்டவரின் தீர்மானம் எவ்வாறாக நிறைவேறுகிறது என்று நாம் உணர்ந்து கொள்ளலாம். சரி. மீண்டும் கதைக்கு வருவோம்.
    ஆண்டவரின் மனிதாவதாரம் பற்றிய நற்செய்தி சம்மனசுகள் மூலமாக உலகுக்கு அறிவிக்கபட்டது. யேசு பாலன் பிறந்த அந்த இரவில் அந்த குகையில் சூசையப்பரும் மாதாவும் தவிர அவர்கள் பயணித்துவந்த கழுதையும் அதன் குட்டியும்தான் இருந்தன.மற்ற ஆடுகள் மாடுகள் பசுக்கள் யாவும் சூசையப்பரால் வெளியில் கட்டப்பட்டு, பிரசவத்துக்காக குகை சுத்தமாக்கப் பட்டிருந்ததது. ஆக, பிறந்துள்ள சுதனாகிய சர்வேசுரனை, மனிதாவதாரமான யேசு என்னும் தெய்வப்பிறவியை,மரியாளையும் சூசையப்பரையும் தவிர கண்ட முதல் ஜீவராசி அந்தக்கழுதையும் அதன் குட்டியும்தான். அந்த தாய் கழுதை இதுவரை தான் சுமந்து வந்தது இந்த அகில உலகையும், அண்ட சராசரங்களையும் படைத்த இரண்டாம் ஆளாகிய சுதனாகிய சர்வேசுரனையும், அவரது திருத்தாயாரும் தேவமாதா என்று அழைக்கப்பட பேறு பெற்றவளுமான மரியாளையும்தான் என்று அறிந்ததோ என்னவோ அதன் கண்களில் கண்ணீர் சுரந்தது.
ஆனந்தக்கூத்தாடி துள்ளிக்குதித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது. இதைப்பார்த்துக்கொண்டிருந்த அதன் குட்டிக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை, அதுவும் தன் தாயோடு சேர்ந்துகொண்டு துள்ளிக்குதித்துக்கொண்டும் பிளிறிக்கொண்டும் தன் அக்களிப்பை வெளிக்காட்டிக்கொண்டது. பிறகு நடந்த நிகழ்ச்சிதான் அனைத்தையும் தூக்கியடிப்பதாக அமைந்தது. தாய்க்கழுதை தன் முன்னங்கால்கள் இரண்டையும் மடக்கிகொண்டு கூடுமானவரை குனிந்து பணிந்து வணங்கியது. தன்னால் இயன்றபடி தோத்திரம் கூறியது.
     அதன் கண்களில் ஆனந்தக்கண்ணீர் பெறுகி ஆறாக ஓடியது.இதைக்கண்ட தேவ தாயாருக்கும் சூசையப்பருக்கும் கூட கண்களில் கண்ணீர் பெருகியது. மாதாவின் தாயுள்ளம்  மிகவும் கசிந்து உருகியது. அவர்கள் அந்தக்கழுதையை அன்பாகத்தடவிக்கொடுதார்கள். அப்பொதுதான் உணர்ந்தார்கள் அதன் ரோமம் கடினமாக இல்லாமல் பட்டுப்போல் மென்மையாக மாறியிருந்ததை. தெய்வ சுதனோடு அதன் தாயாரையும் சுமக்கும் பேறு பெற்ற அந்த கழுதையின் ரோமம் இயற்கைக்குமாறாக பட்டுபோல் மென்மையாக மாறியது எப்படி? எல்லாம்
கடவுள் செயல் என்று மாதா உணர்ந்துகொண்டார்கள்.
அடுத்தநாள் பொழுது விடிந்ததும் பிறந்துள்ள யேசு பாலனைக்காண பலரும் வந்திருந்தனர். ஆடு மாடு மேய்ப்பவர்கள் அவர்கள் குடும்பத்தினர் மற்றும் வழிப்போக்கர்கள் என யார்  யாரோ வந்திருந்தனர். ஆனால் இந்தக்கழுதை மட்டும் தான் இருந்த இடத்தில் அமர்ந்துகொண்டு ஏதோ அந்த இடம் தனக்குத்தான் சொந்தம் என்பதுபோல் யார் வந்தபோதும் அசையாமலும் இடத்தைவிட்டு நகராமலும் கூடுமானால் பிறந்துள்ள யேசுபாலனுக்கு ஒரு காவல் போல் அமர்ந்துகொண்டது. சூசையப்பரும் தேவ மாதாவும் அதன் மேல் உள்ள
பிரியத்தால் வெளியே அதைக்கட்டிவைக்காமல் அதன்போக்கிலேயே அதை விட்டுவிட்டார்கள். அதன் குட்டி மட்டும் அங்கும் இங்குமாக விளையாடிக்கொண்டு இருந்தது. எல்லா இடத்திலும் சில துஷ்டப்பிள்ளைகள் இருப்பார்கள் அல்லவா, அவ்வாரே ஒரு நாள் கூட்டத்தோடு வந்திருந்த ஒரு சில துஷ்ட்டப்பிள்ளைகள் தேவ தாயார் இல்லாத சமயத்தில் குழந்தை யேசுவை கொஞ்சுவதுபோல் வந்து பலமாக கிள்ளிவிட்டு வேடிக்கை பார்த்தனர். ஒரு சிறுவன் பலமாக கிள்ளியபோது குழந்தை யேசுவின் திருகண்ணத்தில் ரத்தம் வெளிப்பட்டு  குழந்தை பலமாக அழத்தொடங்கியது. அந்த சிறுவனை இந்தக்கழுதை பலமாக முட்டித்தள்ளியது.
      ஒரு முறை பத்து வயதுடைய பேய் அவதாரம் போன்ற ஒரு துஷ்ட்ப்பிள்ளை கையில் ஒரு நானற்குச்சியை சட்டையின் பின்புறமாக மறைத்துக்கொண்டு வந்து யேசு பாலனை குச்சியால் பலமாக அடிக்க கையை ஓங்கினான். பார்த்தது கழுதை. நான் இங்கு இருக்கும்போது அது நடக்குமா என்பதுபோல் உடனே ஓடிவந்து அவன் முன்புறமாக நின்று மிகப்பலமாக விட்டது ஒரு உதை. அவ்வளவு தான்! அவன் பத்தடி தள்ளி விழுந்தான்.அவன் போட்ட கூச்சலில் மாதாவும் சூசையப்பரும் வந்துபார்த்தபோது அவன் முன் வரிசைப்பற்கள் இரண்டு கழண்டு விழிந்திருந்தன. அவர்களுக்கு விஷயம் புறிந்துவிட்டது. அதுமுதல் அவர்கள் சுவாமியைவிட்டு ஒரு வினாடி கூட பிறிந்திருக்கவில்லை. ஆனால் அந்த சிறுவன் அன்றுமுதல் இந்த நிகழ்சியை மறவாமல் யேசுவுக்கு பரம எதிரி ஆனான். அந்த மூர்க்க சிறுவனிடமிருந்து குழந்தை யேசுவை காப்பாற்றியது ஐந்தறிவேயுள்ள ஒரு கழுதை. அன்று அவனிடமிருந்து அவர் தப்பித்துக்கொண்டார். ஆனால் சரியாக முப்பத்தி மூன்று ஆண்டுகளும் மூன்று மாதங்களும் முடிந்த போது மீண்டும் அந்த மூர்க்கனிடம் வகையாக மாட்டிக்கொண்டார். ஆம். அவரை கற்றூணில் கட்டிவைத்து அடித்தபின் அவரது திருச்சிரசில் முட்க்கலாள் ஆன
ஒரு முடியைப்பின்னி ஒரு தடியால் ” நச்” என அடித்தான் அந்த மூர்க்கன். சிறு வயதில் அன்று தவற விட்ட அடியை இன்று மிகச்சரியாய் நிறைவேற்றினான். இன்று அவரைக் காப்பாற்ற எந்த மனிதக்கழுதையும் முன்வரவில்லை. சுவாமி யேசுநாதர் அந்த அடியின் வேதனையை முதன் முதலாக காம பார்வை பார்த்து அதன்மூலம் கற்பிழக்கும் ஆண்களுக்கும்  கன்னிப்பெண்களுக்கும் பாவ பொறுத்தலாக ஒப்புக்கொடுத்தார். எனவே ஆண்களும் சரி, பெண்களும் சரி தாங்கள் மனது பொருந்தி செய்யும் காம லீலைகள் ஆண்டவருக்கும்சரி,
அவர்களுக்கும் சரி, எவ்வளவு பயங்கரமான வேதனையை ஏற்ப்படுத்தும் என்பதைப்புறிந்துகொண்டால் சரிதான். அடடடே….. கதையைவிட்டுவிட்டு எங்கோ போய்விட்டேன்.
    பிறகு சுவாமிக்கு யேசு என்ற பெயர் சூட்டி,விருத்த சேதனமும் செய்வித்து பிறகு மூன்று இராஜாக்கள் வந்து பார்த்தபின்பு சுவாமியை ஜெருசலேமில் காணிக்கையாக ஒப்புகொடுத்து மீண்டும் சொந்த ஊருக்குப்புறப்பட்டனர். கொடுத்துவைத்தது அந்தக்கழுதை. கழுதை தேவதாயாரையும் குழந்தை யேசுவையும் சுமந்துகொண்டுவர அனைவரும் நசரேத்தை அடைந்தனர். நசரேத்தை அடைந்ததும் கழுதைக்கு சுதந்திரம் கொடுத்து அவிழ்த்து விட்டனர். அது அவர்களை விட்டு நகரவே மாட்டேன் என்றது. இனிமேல் தேவதாயாரையும் அவர் குழந்தையும் சுமக்கும் பேறு மீண்டும் தனக்கு கிடைக்கதோ என்று நினைத்து அதற்கு முகமே மாறி விட்டது. இருப்பினும் திருக்குடும்பத்தின் ஆதரவிலேயே அது இருந்தது.  சரியாக மூன்று மாதங்களுக்குப்பிறகு இந்தக்கழுதைக்கு அடித்தது யோகம். ஆம். ஏரொது ராஜாவின் ஆணைப்படி பிறந்து மூன்று ஆண்டுகளுக்குள்ளான ஆண் குழந்தைகள் யாவரும்கொல்லப்படவேண்டும் என்ற இரகசிய ஆணை வெளிப்படுமுன் சூசையப்பர் கனவில் ஒரு சம்மனசானவர் தோன்றி எச்சரித்ததை அடுத்து இரவோடு இரவாக மாதாவையும் குழந்தை யேசுவையும் இந்த கழுதை மேல் ஏற்றிக்கொண்டு அதன் குட்டியுடன் எகிப்திற்க்கு சென்றுவிட்டது திருக்குடும்பம். எகிப்த்தில் அவர்கள் தங்கிய இடத்தின் பெயர் ஹிலியோபொலிஸ்
என்பதாகும். வீரமாமுனிவர் இந்த இடத்தை இரவிமாநகர் என்று குறிப்பிடுகின்றார் தன் தேம்பாவணி என்னும் காப்பியத்தில். திருக்குடும்பம் எகிப்த்தில் பல இடங்களில் வசித்தனர்.
     இவ்வாறாக எட்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. யேசுவைக்கொல்லத்தேடியவர்கள் ஜெருசலேமில் மறைந்ததை அடுத்து திருக்குடும்பம் மீண்டும் இஸ்ராயெல் நாட்டிற்குத்திரும்ப வேண்டி ஆண்டவரின் ஆணை கிடைத்ததை முன்னிட்டு திருக்குடும்பம் மீண்டும் நசரேத்தூர் வந்தடைந்தது. ” என் மகனை மீண்டும் எகிப்தினின்று அழைத்துக்கொண்டேன்” என்ற வேத வாக்கும் “இவ்விதமாக நசரேயன் என்று அழைக்கப்படுவார்” என்ற வேத வாக்கும் நிறைவேறிற்று. திருக்குடும்பதின் எகிப்திய பயணத்தின் போதும் பெத்லஹேம் பயணத்தின் போதும் அந்த கழுதையின் குட்டிக்கும் ஒரு பங்கு இருந்தது. பயணத்தின் போது அது வழிகாட்டும். மேலும் தங்குமிடங்களிள் எப்பொதெல்லாம் சூசையப்பருக்குப்பணம் தேவையோ அப்பொதெல்லாம் அவர் அதை அடமானம்வைத்து பணம் பெற்றுக்கொள்வார். பிறகு மீட்டுக்கொள்வார். இவ்வாறாக அந்தக்கழுதைகுட்டியும் திருக்குடும்பத்திற்கு உதவியது.
நசரேத்தில் திருக்குடும்பம் நிம்மதியாக வாழத்தொடங்கிய உடன் இந்த தாய்க்கழுதை இனிமேல் தன் சேவை இவர்களுக்குத்தேவையில்லை என்று நினைத்ததோ என்னவோ தன் கடமை முடிந்ததென்று தன் கண்கள் இரண்டையும் இறுக்கமூடிக்கொண்டது. மாதாவும் சூசையப்பரும் அதன் பிரிவால் கண்ணீர் விட்டனர்.
     குருத்தோலை ஞாயிறன்று இந்தக்கழுதையின் வாரிசுதான் சுவாமிக்கு 33 வயதாகும்போது ஓசன்னா பாடலுடன் அவரை ஜெருசலேம் நகருக்குள் அழைத்துச்சென்றது. தான் யாரை சுமந்து செல்கிறோம் என்று அது புறிந்துகொண்டது போலும். அதற்குப் பெருமை தாங்க முடியவில்லை. அது தன் நடை மறந்து சிங்கநடை போட்டது. பிறந்தாலும் இந்த கழுதையாய் பிறந்திருக்கவேண்டும். அப்போதுதான் நமக்கும் அந்த பாக்கியம் கிடைக்கும். இப்போது சொல்லுங்கள் “யார் சொன்னது கழுதைக்கு கற்பூரவாசனை தெரியாது” என்று.

No comments:

Post a Comment